லாலு கட்சி எம்எல்ஏவுக்கு 10 ஆண்டு சிறை – ஏகே 47 ரக துப்பாக்கி வழக்கின் தீர்ப்பால் பதவி இழக்கும் அபாயம்

புதுடெல்லி: ஏகே-47 ரக துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர்பான வழக்கில் பிஹாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏவான அனந்த் சிங்குக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பதவி இழக்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

பிஹாரில் குற்றப்பின்னணி கொண்ட அரசியல்வாதியாக இருப்பவர் அனந்த் சிங். ஐந்தாவது முறையாக மொகாமா தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் இவர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 16-ம் தேதி அனந்த்சிங்கின் சொந்த கிராமமான நத்வானில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, வீட்டில் 32 குண்டு களுடன் ஏகே-47 துப்பாக்கியும், 2 கண்ணி வெடிகுண்டுகளும் கிடைத்தன. இதனால், அவர் மீதும் அவருக்கு நெருக்கமானவரான சுனில் சிங் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து தலைமறைவான அனந்த்சிங், டெல்லியின் சாக்கேத் நீதிமன்றத்தில் 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி சரணடைந்தார். பிஹார் கொண்டுவரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், கடந்த ஜுன் 14-ல் குற்றம் நிரூபிக்கப்பட்டு நேற்று அனந்த்சிங், சுனில் சிங் ஆகியோருக்கு 10 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தேர்தல் விதிமுறைகள் சட்டத்தின்படி 2 வருடங்களுக்கும் அதிகமான தண்டனை பெற்றதால், அனந்த் சிங்கின் எம்எல்ஏ பதவி பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாக அனந்த்சிங்கின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் மேலும் 4 கிரிமினல் வழக்குகளும் அனந்த் சிங் மீது பிஹாரின் பல்வேறு நீதிமன்றங்களில் நடைபெறுகிறது.

நீதிமன்ற தீர்ப்பினால் 2013-ல் லாலு பிரசாத் யாதவும், ஜெக்தீஷ் சர்மாவும் தங்களது எம்.பி. பதவியை இழந்தனர். 2018-ல் லாலு கட்சியின் ஆட்சியில் அமைச்சராகவும் இருந்த ராஜ்வல்லப் யாதவும் பாலியல் குற்ற வழக்கில் எம்எல்ஏ பதவியை இழந்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.