தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை கரோனா வேகமாக பரவுகிறது: மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை கரோனா வேகமாக பரவி வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார்.

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதி மக்களின் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிகையில், “உலகம் முழுவதும் தினசரி 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரையில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 8 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரம் வரை தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்திலும் கரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது. அந்த வகையில் சேலம், நாமக்கல், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பில் 50 சதவீதம் பேர் சென்னையில் பாதிக்கப்படுகின்றனர்.

சென்னையில் 112 தெருக்களில் 3 பேருக்கு மேலும், 25 தெருக்களில் 5 பேருக்கு மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் 2,225 பேர் சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிப்படுத்தி சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் 3 ஆயிரத்து 500 களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.

வீடுகளில் இடவசதி இல்லாதவர்கள் என்ற அடிப்படையில் 5 பேர் மட்டுமே சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 8 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

தற்போது, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன்பு, அவர்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதிக்க வேண்டும். மருத்துவர்களின் ஆலோசனை பெறுவது என்பது முக்கியம். எனவே, பெற்றோர்கள் யாரும் அலட்சியமாக இருக்க கூடாது.

தற்போது கரோனா பரவலின் பெரும் பகுதி பிஏ4, பிஏ5 என்ற வகை கரோனாவாக தான் உள்ளது. இவை வேகமாக பரவும் தன்மை உடையது என்பது நிருபணமாகி இருக்கிறது. தமிழகத்தில் வருகிற ஜூலை மாதம் 10-ம் தேதி 1 லட்சம் இடங்களில் 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.