டி.என்.பி.எல் : மதுரை அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

நெல்லை,

6-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை சங்கர் நகரில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், கோவை கிங்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில், நெல்லையில் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மதுரை பாந்தர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற, மதுரை பாந்தர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 135 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம் மதுரை அணிக்கு 136 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் சிறப்பாக விளையாடிய உத்திரசாமி சசிதேவ் 43 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார். அதேபோல், ஹரிஷ் குமார் 43 பந்துகளில் 39 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மதுரை பாந்தர்ஸ் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. எனினும், மதுரை அணியின் பாலச்சந்தர் அனிருத் (58* ரன்கள்)பொறுப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். 18.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.