அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 போட்டி: இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

டப்ளின்,

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இதற்கிடையே, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய இரண்டாம் தர அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.

இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது. இந்திய அணியில் அறிமுக வீரராக இன்று உம்ரான் மாலிக் களம் இறங்குகிறார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.