'எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உயிரினும் மேலான தொண்டர்கள் என்பக்கம் உள்ளனர்' – ஓபிஎஸ்

மதுரை:”அதிமுகவில், இன்றைக்கு இருக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலை, யாரால் எப்படி ஏற்பட்டது?, எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டது?, என்பதை அறிந்து கூடிய விரைவில், மக்களே அவர்களுக்கு நல்ல தீர்ப்பினை வழங்குவார்கள்” என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்குப் பின்னர், டெல்லி சென்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழகம் திரும்பினார். டெல்லியிருந்து மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர், “மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிரினும் மேலான தொண்டர்கள் என் பக்கம் இருக்கிறார்கள். மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் உயிரினும் மேலான தொண்டர்களின் பக்கமே நான் நிற்கிறேன். தொண்டர்களுக்காகவே நான், தொண்டர்களுடனேயே நான் என்று வாழ்கிறேன்.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் 50 ஆண்டுகாலம், இந்த இயக்கத்தை மனிதாபிமான இயக்கமாக தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று, 30 ஆண்டுகாலம் முதல்வர்களாக அவர்கள் நல்லாட்சி நடத்தியிருக்கின்றனர்.

இன்றைக்கு இருக்கின்ற இந்த அசாதாரணமான சூழ்நிலை, யாரால் எப்படி ஏற்பட்டது, எவரால் இந்த சதிவலை பின்னப்பட்டது, என்பதை கூடிய விரைவில், மக்களே அவர்களுக்கு நல்ல தீர்ப்பினை வழங்குவார்கள். அவர்கள் செய்த தவறுக்கு மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் தொண்டர்கள், உறுதியாக உரிய பாடத்தை தண்டனையை வழங்குவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.