பட்டாம்பூச்சி விமர்சனம்: சைக்கோ கொலைகாரன் vs அதிரடி போலீஸ் – ஜெய், சுந்தர்.சி காம்போ மிரட்டுகிறதா?

சீரியல் கொலைகாரர் ஒருவர் தரும் ஒப்புதல் வாக்குமூலம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதுதான் `பட்டாம்பூச்சி’ படத்தின் ஒன்லைன்.

கொலை வழக்கொன்றில் தூக்குத் தண்டனைக்குக் காத்திருக்கிறார் சுதாகர். தன் கடைசி ஆசையாகப் பத்திரிகையாளர் ஒருவரைச் சந்திக்க விரும்புகிறார். அந்தச் சந்திப்பில் தான் ஏற்கெனவே ஏழு கொலைகள் செய்திருப்பதாகவும், அந்தப் பத்திரிகையாளர் தொடர்ச்சியாக எழுதி வந்த ‘பட்டாம்பூச்சி’ சீரியல் கில்லர் தானே என்றும், தற்போது குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கும் கொலைக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என அறிவிக்கிறார்.

பட்டாம்பூச்சி

30 நாள்களுக்குள் ஏழு கொலைகளுக்கான காரணத்தையும், கொலை செய்த விதம் குறித்தும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் பொறுப்பு காவல் அதிகாரி குமரனுக்கு வருகிறது. புதிது புதிதாகக் கட்டளைகள் பிறப்பிக்கும் சுதாகரை எப்படி டீல் செய்கிறார் குமரன் எனக் கதை விரிகிறது. இன்னொரு பக்கம் சுதாகர் ஏன் இப்படி ஆனார் என்பதும், குமரனுக்கான குடும்ப பிரச்னைகள் குறித்தும், குமரனுக்கும் பத்திரிகையாளருக்குமான சம்பந்தம் குறித்தும் காட்சிகள் அடுக்கப்படுகின்றன.

யார் யாரின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள், சுதாகர் வெறுமனே ஒரு சீரியல் கில்லரா அல்லது ஆகப்பெரும் கில்லாடியா என்பதாக சைக்கோ த்ரில்லர் கதையாக விரிகிறது இந்த ‘பட்டாம்பூச்சி’.

சுதாகராக நடிகர் ஜெய். இந்திய சினிமாக்களில் டான் கதாபாத்திரம் ஏற்று நடிப்பவர்களின் காட்சிகளில்கூட பெண்கள், குழந்தைகளை டீல் செய்யும் போது சாஃப்ட்டாகத்தான் காட்சிகள் அடுக்குவார்கள். ஆனால், நாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் ஜெய்க்கு இதில் கொடூர சீரியல் கில்லர் வேடம். அதுவும் குறிப்பாக சிறுவர்கள், பெண்கள் என டார்கெட் செய்து குரூரமாகக் கொல்லும் வேடம். எதைப் பற்றியும் யோசிக்காமல் துணிந்து நடித்திருக்கிறார். அதிலும் படத்தின் இறுதிக்காட்சிகளில் சிரித்துக்கொண்டே யாரை எப்படி கொலை செய்தேன் என ஜெய் சொல்வது வேற லெவல் சைக்கோத்தனம்.

தன் குடும்பத்தில் ஏற்பட்ட இழப்பின் வடு அகலாத குமரனாக சுந்தர் சி. தனக்கு இருக்கும் பிரச்னை வெளிப்படும் காட்சிகளில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். பத்திரிகையாளர் வேடத்தில் ஹனிரோஸ். அவருக்கான காட்சிகள் சிறப்பாக எழுதப்பட்டிருந்தாலும், அவரை வெறுமனே ஒரு கிளாமர் மாடலாக சித்திரித்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம்.

பட்டாம்பூச்சி

படத்தின் முதல் பாதியில் சில வசனங்கள் சுவாரஸ்யமாய் எழுதப்பட்டிருக்கின்றன. பத்ரி, பாலாஜி வேணுகோபால், போகன் சங்கர் குழுவுக்குப் பாராட்டுக்கள். அதே போல், த்ரில்லர் கதையை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காகச் சாத்வீகமாக எடுக்காமல், கொலைகள் இப்படித்தான் நடக்கின்றன, கொலைகாரர்கள் யாருக்கும் தயவு தாட்சண்யம் பார்ப்பதில்லை என்பதை அழுத்தமாக விவரிக்கும் காட்சிகள் தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய முயற்சி.

ஆனால், த்ரில்லராக ஆரம்பிக்கும் ‘பட்டாம்பூச்சி’, ஒரு கட்டத்துக்கு மேல் அப்படியே நின்றுவிடுகிறது. முதல் பாதியில் இடைவேளை வரை வெளிப்படும் அந்த அதிபுத்திசாலித்தனம் இரண்டாம் பாதியில் மொத்தமாக மிஸ்ஸிங். சேஸிங், கடத்தல், சண்டை என்பதாக மட்டுமே காட்சிகளை அடுக்கியிருக்கிறார்கள். இமான் அண்ணாச்சியின் காட்சிகளில் நம்பகத்தன்மை குறைகிறது. நவநீத் சுந்தரின் பின்னணி இசை ஆங்காங்கே மிரட்டினாலும், எங்கேயோ கேட்ட இசை போலத் தொனிக்கிறது.

பட்டாம்பூச்சி

சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கும் கதைக்கு இன்னும் சிரத்தையுடன் இரண்டாம் பாதியை அமைத்திருந்தால், ‘பட்டாம்பூச்சி’ தன் சிறகை இன்னும் மிரட்டலாய் விரித்திருக்கும். அதே சமயம், இது எல்லோருக்குமான சினிமா அல்ல. வன்முறைக் காட்சிகள் சற்று அதீதம் என்பதால், அதை உணர்ந்து இந்தப் படத்துக்குச் செல்வது யாவருக்கும் நலம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.