ஆன்லைன் ரம்மி தடைக்கு அவசரச் சட்டம் – தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

சென்னை: தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய அவசரச் சட்டம் பிறப்பிப்பது குறித்தும், புதிய தொழில் முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள விளையாட்டுகளில் பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழப்பதுடன், கடன் தொல்லை மற்றும் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

இதனால் பல்வேறு சமூக, பொருளாதாரக் குற்றங்களும், தற்கொலைச் சம்பவங்களும் நிகழ்வதை அரசின் கவனத்துக்கு பல்வேறு சமூக அமைப்புகள் கொண்டுவந்தன.

இதையடுத்து, கடந்த ஜூன் 10-ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு, ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும், இந்த விளையாட்டுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும், இவற்றை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்து ஆய்வுசெய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்குமாறு முதல்வர் உத்தரவிட்டார்.

இக்குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல் துறை கூடுதல் டிஜிபி வினித் தேவ் வான்கடே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழு தனது அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று சமர்ப்பித்தது.

இந்த அறிக்கை மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று மாலை 6.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. இதில், துரைமுருகன், நேரு உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, நிதித் துறைச் செயலர் நா.முருகானந்தம், தொழில்துறைச் செயலர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரவு 7.55 மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை விவாதிக்கப்பட்டு, விளையாட்டை தடை செய்வதற்கான அவசரச் சட்டம் தொடர்பாக முடிவெடுக்கப்பட்டது.

தொழில் நிறுவனங்களுக்கு சலுகை

தொடர்ந்து, தமிழகத்தில் தொழில் தொடங்க விண்ணப்பித்த புதிய தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள், அனுமதிகள் வழங்குவதற்கான ஒப்புதல்களும் அளிக்கப்பட்டன. இதுதவிர, கரோனா பரவல் கட்டுப்பாடு மற்றும் சில துறைகள் தொடர்பான திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.