இலங்கையில் ஜூலை 10-ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல்..!!

கொழும்பு,

அன்னியச் செலாவணி பற்றாக்குறை, அதையடுத்து தொடர்வினையாய் ஏற்பட்ட பிரச்சினைகளால் அண்டை நாடான இலங்கை தவித்துவருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து பொதுமக்களின் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

இதுதொடர்பான வன்முறைகளில் ஒரு எம்.பி. உள்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட கொந்தளிப்பான சூழ்நிலையால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே உள்ளிட்ட மந்திரிகள் ராஜினாமா செய்திருக்கின்றனர். இந்த சூழலில் இலங்கையில் 2 மாதங்களில் 3-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் இலங்கையில் ஜூலை 10-ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருளுக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில், ஜூலை 10-ம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பெட்ரோல் – டீசல் விற்பனை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் ஜுலை மாதம் 10ஆம் தேதி வரை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே எரிபொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் ஜுலை மாதம் 10ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள் இயங்காது என்றும் ஏனைய அனைத்து சேவைகளும் முடக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.