ஒரே பிரேமில் மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி – இணையத்தில் கொண்டாடும் ரசிகர்கள்! என்ன ஸ்பெஷல்?

மலையாள சினிமா உலகின் மன்னர்களாக வலம் வருபவர்கள் மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி. இவர்கள் மூவரும் ஒன்றாக நடித்த படங்கள் அரிதினும் அரிதானவை. அதே சமயம் அவர்கள் மூவரும் ஒன்றாகச் சேர்ந்து போட்டோ எடுத்துக்கொள்வதும் மிகவும் அபூர்வம். சமீபத்தில் மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி ஆகிய மூவேந்தர்களும் சேர்ந்து எடுத்த போட்டோ ஒன்று வெளியானது. அந்தப் புகைப்படத்தை வைத்துக் கொண்டாடித் தீர்த்துவிட்டனர் ரசிகர்கள்.

மலையாள நடிகர்கள் சங்கமான AMMA-வின் வருடாந்திர பொதுக்குழு நேற்று நடந்தது. நேற்றுதான் நடிகர் சுரேஷ் கோபிக்குப் பிறந்த நாளும்கூட. மம்மூட்டியும், மோகன்லாலும் சேர்ந்து நடிகர் சுரேஷ் கோபிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது சுரேஷ் கோபி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியபோது மம்மூட்டியும், மோகன்லாலும் அந்தக் கொண்டாட்டத்தில் பங்கெடுத்தனர்.

இந்த போட்டோவை சுரேஷ் கோபி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ஹார்ட்டின் சிம்பல்களைப் பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்தப் பதிவுக்குப் பின்னால் கமென்ட்டுகளைத் தெறிக்க விட்டுள்ளது ரசிகர் பட்டாளம். ‘மலையாளத்தின் மகா நடிகர்கள். மலையாளத்தின் நட்சத்திர ராஜாக்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே பிரேமில்… மலையாள சினிமாவில் இது ஓர் அபூர்வ தருணம்’ எனப் பின்னூட்டமிட்டு புளங்காகிதம் அடைந்துள்ளனர் ரசிகர்கள்.

இயக்குநர் ஜோசி இயக்கத்தில் தயாரான ‘பாப்பன்’ என்ற படத்தில் சுரேஷ் கோபி நடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் வெளியாக உள்ளது. ‘சலாம் காஷ்மீரி’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ஜோஷியுடன் இந்தப் படத்தில் கைகோத்துள்ளார் சுரேஷ் கோபி. அவர் தனது மகன் கோகுலுடன் சேர்ந்து நடிக்கும் படம் இது என்பது கூடுதல் சிறப்பு. ராஜ்யசபா எம்.பி பதவிக்காலம் முடிந்த பிறகு சினிமா நிகழ்வுகளில் சுரேஷ் கோபியை அதிகமாகக் காணமுடிகிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.