ஜோர்டான் துறைமுகத்தில் விஷ வாயு கசிவு – 10 பேர் உயிரிழப்பு; 251 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

அகாபா: ஜோர்டான் நாட்டின் துறைமுகத்தில் விஷவாயு கசிந்தது 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜோர்டானின் தெற்கு துறைமுக நகரம் அகாபா. இங்கு தான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 251 பேருக்கு உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அந்நாட்டு செய்தித் தொடர்பாளர் பைசல் அல்-ஷாபூல் உறுதிப்படுத்தியுள்ளார். விஷ வாயு நிரப்பப்பட்ட தொட்டி கொண்டுசெல்லும் போது விழுந்ததில் கசிவு ஏற்பட்டு விபத்து உண்டானது. விஷ வாயு கசிந்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டவர்களை அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் அந்த பகுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாயு கசிவு ஏற்படாமல் இருக்க, நிபுணர்களை அனுப்பி வைத்துள்ளது ஜோர்டான் அரசு. அதேநேரம், அகாபா பகுதி பொதுமக்கள் வாயு கசிவில் பாதிக்கப்படாமல் இருக்க ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூட அந்நாட்டு அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். அருகிலுள்ள குடியிருப்பு பகுதி 25 கிமீ தொலைவில் உள்ளது. இதனால் பாதிப்பு பெரிதாக இருக்காது என்றுத் தெரிகிறது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வாயு கசிவு தொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஒரு பெரிய உருளை போன்ற ஒன்று கிரேனிலிருந்து கீழே விழுந்து கப்பல் ஒன்றின் மேல்தளத்தில் மோதுகிறது. அதைத் தொடர்ந்து மஞ்சள் நிற வாயு புகை மண்டலமாக வெளியேறுகிற காட்சிகள் வெளியாகியுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.