தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் இலங்கை தம்பதி! கண்ணீர் பேட்டி




Courtesy: BBC Tamil

இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்து மயங்கிய நிலையில் கடந்த வயோதிக தம்பதியை தமிழ்நாடு மரைன் போலீஸார் மீட்டுள்ளனர். சொந்த நாட்டில் வாழ வழியின்றி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.  

இலங்கையில் நீடித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உணவுப் பொருட்கள் உள்ளிட்டவைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இலங்கை மக்கள் பலர் தாய்நாட்டில் வாழ வழியின்றி இரு நாட்டு கடல் பாதுகாப்பையும் மீறி கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் தமிழ்நாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், இப்படி வரும் இலங்கையர்களை அகதியாக கருத அனுமதிக்குமாறு தமிழ்நாடு அரசு இந்திய அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், அடைக்கலம் தேடி தமிழ்நாடு வரும் இலங்கையர்களை சட்டவிரோதமாக ஊடுருவியவர்களாகக் கருதாமல் முகாம்களில் வைத்திருக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

  

இந்த நிலையில் இன்று காலையில் தனுஷ்கோடியை அடுத்த கோதண்டராமர் கடற்கரை பகுதியில் வயது வயோதிக தம்பதி, கடற்கரை ஓரம் மயங்கிய நிலையில் கிடப்பதாக அப்பகுதியில் உள்ள மீனவர்கள் ராமேஸ்வரம் மரைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் மரைன் போலீஸ் சார்பு ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் காவலர்கள் கடற்கரை ஓரம் மயங்கிய நிலையில் இருந்த இருவரை மீட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க அவசர ஊர்தி அழைக்கப்பட்டது. ஆனால் தம்பதி இருவரும் கடற்கரைக்கு அருகே இருந்ததால் அவசர வாகனத்தால் அந்த பகுதிக்கு வர முடியவில்லை.  

தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் இலங்கை தம்பதி! கண்ணீர் பேட்டி | Tamil Refugee In Dhanushkodi

ஆம்புலன்ஸ் வராததால் ஹோவர் படகில் மீட்பு  

இதையடுத்து மரைன் ஆய்வாளர் கனகராஜ், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையின் உதவியை நாடினார். அதன்பேரில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்துக் கப்பல் கோதண்டராமர் கடற்கரைக்கு வரவழைக்கப்பட்டது.  

அதில் இருந்த வீரர்கள் இலங்கை தம்பதியை மீட்டு ராமேஸ்வரத்தை அடுத்துள்ள இரட்டை தாளை கடற்கரைப்பகுதியில் வைத்து இருவரையும் மரைன் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்து ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தம்பதிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.  

இதைத்தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அடைக்கலம் கோரி வந்தவர்கள், இலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிட்டி பகுதியைச் சேர்ந்த சிவன் (82) மற்றும் அவருடன் இருந்தது அவரது மனைவி பரமேஸ்வரி (75) என்பது தெரிய வந்தது.  

மன்னாரில் கூலி வேலை செய்து வந்த தனக்கு 3 பெண்கள், ஒரு மகன் இருப்பதாக சிவன் தெரிவித்துள்ளார்.  

தனுஷ்கோடியில் மயங்கிய நிலையில் இலங்கை தம்பதி! கண்ணீர் பேட்டி | Tamil Refugee In Dhanushkodi

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாகவும் வயோதிக நிலையில், தாய்நாட்டில் வாழ முடியாததால் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியுள்ள தனது மகனுடன் சேர்ந்து வாழ விரும்பியதாகவும் இந்த வயோதிக தம்பதி கூறினர்.  

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் மன்னார் பேசாலையில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தனுஷ்கோடி வரை வந்துள்ளனர்.  

கடல் நீரை குடித்த தம்பதி  

கடலில் உயிரை பணயம் வைத்து வந்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய முதியவர் சிவன், ‘படகில் எங்களை அழைத்து வந்தவர்கள், நள்ளிரவில் கடற்கரை ஓரம் தள்ளிவிட்டுச் சென்றனர். இருளில் எங்கே செல்வது என தெரியாமல் மணல் திட்டில் காத்திருந்தோம். உணவு சாப்பிடாமல் கடல் நீரை குடித்தோம். இரவுக் குளிரும் காலை வெப்பமும் வாட்டியது. ரத்த அழுத்தம் அதிகரித்து உடல் சோர்வடைந்தால் ஒரு கட்டத்தில் இருவரும் கடற்கரையில் மயங்கி விழுந்து விட்டோம்’ என்கிறார் சிவன்.  

‘முதலில் நாங்கள் இருவரும் இறந்து விட்டோம் என நினைத்த போது மரைன் போலீசார் முதலுதவி அளித்து கடும் சிரமத்திற்கு மத்தியில் எங்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்து காப்பாற்றினர்’ என்று சிவன் தெரிவித்தார்.  

 

3 மாதங்களில் 92 பேர் வருகை  

தற்போது இருவரது உடல்நிலையும் சீரடைந்த நிலையில், மத்திய, மாநில பாதுகாப்பு அதிகாரிகள் குழு இருவரிடமும் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து மண்டபம் அகதிகள் முகாமில் இருவரையும் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் இன்று வரை 26 குடும்பங்களைச் சேர்ந்த 92 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக பதிவு செய்யடாமல் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.