சபையை எல்லாம்கூட்ட வேண்டாம்… நானே போயிடுறேன்… பதவியை ராஜினாமா செய்த முதல்வர்!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனாவுக்கு எதிராக அக்கட்சியின் அதிருப்தி எம்எல்ஏக்கள், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து, மகாராஷ்டிர சட்டசபையில் நாளை சிறப்பு கூட்டத்தை கூட்டி மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தவ் தாக்கரேவுக்கு மாநில ஆளுநர் பகத்சிங் கோஷியாரி உத்தரவிட்டு, அதனை அவர் கடிதமாகவும் அனுப்பி இருந்தார்.

ஆளுநரின் இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தடை விதிக்க முடியாது என்று கூறிவிட்டனர்.

இதையடுத்து இன்றிரவு (ஜூன் 29) ஃபேஸ்புக் நேரலையில் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சட்ட மேலவை பதவியில் இருந்தும் விலகுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமக்கு யார் மீதும் வருத்தம் இல்லை என்று கூறிய அவர், கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்து தமக்கு ஆதரவு அளித்த தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினருக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, நாளை அல்லது நாளை மறுதினம் தேவேந்திர பட்னாவிஸ், ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க அனுமதி கோருவார் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.