சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் உடல்நிலை குறித்து வெளியான அப்டேட்

நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தற்போது அறுவை சிகிச்சை முடிந்து குணமாகி வருவதாக புகைப்படத்துடன் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் பன்முகத் திறமை கொண்டவரான டி. ராஜேந்தர், உடல்நிலை குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த மாதம் 19-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம் என டி.ராஜேந்தரரின் மகனும், முன்னணி நடிகருமான சிம்பு அண்மையில் அறிக்கை வாயிலாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்கான ஏற்பாடுகளைச் செய்யவும், அறுவை சிகிச்சையை விரைவாகச் செய்யவும், அவருக்கு முன்னதாகவே, அவரின் மகன் சிம்பு அமெரிக்கா சென்றார். இதனைத் தொடர்ந்து கடந்த 14-ம் தேதி டி.ராஜேந்தர் அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். இதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது என் மகன் சிலம்பரசனுக்காக தான் உயர் சிகிச்சைக்கு செல்கிறேன் என்றும், இப்படி ஒரு மகனை பெற்றது இந்த ஜென்மத்தில் செய்த பாக்கியம் எனவும், இறைவனை மீறி, விதியை மீறி எதுவும் நடக்காது எனக் கூறியிருந்தார்.

image

இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை முடிந்து, தற்போது குணமாகி வரும் டிராஜேந்தரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருடன் அவரது மனைவி உஷா ராஜேந்தர், மகன் சிம்பு ஆகியோரும் உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. முழு சிகிச்சையும் முடித்துக்கொண்டு டி.ராஜேந்தர் தனது குடும்பத்தினருடன் விரைவில் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை திரும்பியதும் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘பத்து தல’ படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

image

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.