ஜனாதிபதி தேர்தல் வாக்கு சேகரிக்க யஷ்வந்த் சின்கா கேரளா வருகை; மு.க.ஸ்டாலினுடன் நாளை சந்திப்பு

திருவனந்தபுரம்: ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் யஷ்வந்த் சின்கா வாக்கு சேகரிப்பதற்காக திருவனந்தபுரம் வந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார். ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 18ம் தேதி நடைபெறுகிறது. பாஜக கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் ஒன்றிய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் போட்டியிடுகின்றனர். 2 வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டனர். இந்த நிலையில் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா இன்று முதல் தென் மாநிலங்களில் வாக்கு சேகரிப்பை தொடங்குகிறார். இதற்காக நேற்று இரவு விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். விமானநிலையத்தில் அவரை கேரள சட்டம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ராஜீவ் வரவேற்றார். இன்று அவர் முதல்வர் பினராய் விஜயன், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். நாளை யஷ்வந்த் சின்கா சென்னை வருகிறார். அவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.