தமிழ்ப் பிராமி எழுத்தில் திருக்குறள்; சாதனை படைத்த முனைவர் சைவ சற்குணம்; குவியும் பாராட்டுகள்

க.சண்முகவடிவேல், திருச்சி

தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப் பயன்படுத்தப்பட்ட ஒலிப்பியல் ஓர் எழுத்து முறைமையும், இது தமிழ் மொழிக்கு முன்னோடி எழுத்து முறைமையும் ஆகும்.

இது தெற்கு ஆசியாவில் பயன்பாட்டில் இருந்த பிராமி எழுத்து முறைகளான அசோகப் பிராமி, தென் பிராமி மற்றும் பட்டிபிரோலு எழுத்து முறைகளிலிருந்து வேறுபட்டது மட்டுமல்லாமல், அதற்கு முந்தைய முறைமையாகும்.

தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் குகைப் படுக்கைகள், மட்கல ஓடுகள், முதுமக்கள் தாழிகள், நாணயங்கள், முத்திரை அச்சுக்கள், மோதிரங்கள் ஆகியவற்றிலிருந்து இந்த தமிழி எழுத்துக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழுக்கு முன்போ அல்லது சம காலத்திலோ அராமைக் மொழி எழுத்து வடிவங்கள் பெற்றன. ஆனால் சில காலத்தில் இவை இல்லாமல் போயின. சீன மொழி சித்திர எழுத்துக்களாக பரினமித்தது. தொடர்ச்சியான எழுத்து வரலாறு உடைய மொழி தமிழ் ஒன்று மட்டுமே. உலகில் உள்ள மற்ற எழுத்து வடிவங்கள் காலத்தால் பிந்தியவை என அறிஞர்களால் சொல்லப்படுகின்றது.

அந்தவகையில் தமிழ்ப் பிராமி எழுத்தக்கள் மூலம் ஆதித்தமிழை நம் அடுத்த தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வகையில், கல்வெட்டியலில் தனக்குள்ள ஈடுபாட்டின் காரணமாக தமிழ் பிராமி எழுத்துக்களை கற்று அதை சிறு சிறு வாக்கியங்களில் எழுதி, இதில் முழுமையாக ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பிய முனைவர் சைவ.சற்குணம் “ஆதித்தமிழை அறிவாய் தமிழா” என்ற நூலை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதில் கி.மு5-ம் நூற்றாண்டில் இருந்து 2-ம் நூற்றாண்டு வரை உள்ள காலகட்டங்களில் தமிழில் எத்தகைய எழுத்துருவை பயன்படுத்தினார்களோ அதே தமிழ் பிராமி எழுத்துக்களை பயன்படுத்தி திருக்குறளின் 1330 குறள்களை எழுதி தமிழ் அறிஞர்களின் பாராடுதல்களைப் பெற்றுள்ளார்.

திருச்சி மாவட்டம் லால்குடி, ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சைவ சற்குணன். இவர் தமிழில் முனைவர் பட்டம், திருக்குறள் புலவர் பட்டம், ஓலைச்சுவடியியல், கல்வெட்டியியல் பட்டயம் சமஸ்கிரதத்தில் பட்டயம் பெற்றுள்ளார். மேலும், பட்டதாரி ஆசிரியர், முதுநிலை தமிழ் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராக கடந்த 20 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

திருச்சி முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் புதுக்கவிதை பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகள் மட்டுமின்றி, யாப்பியல் படைப்பில் குமார வயலூர் திருச்சதகவந்தாதி, வயலூர் மறப்பிலிநாதன் போற்றித் திருத்தாண்டகம், வயலூரான் கலிவெண்பா, சிவனுறை பதிகள் 108, திருச்செந்தூர் திருச்சதகவந்தாதி உள்ளிட்ட நூல்களையும் இயற்றியுள்ளார்.

இதுகுறித்து முனைவர். சைவ.சற்குணன் தெரிவிக்கையில்; தமிழ் பிராமிய எழுத்துக்களின் திருக்குறள் அனைத்தையும் கடந்த 5 மாதங்களில் எழுதி நூலாக வெளியிட்டுள்ளேன். இந்த நூல் 260 பக்கங்களில் தற்போது வெளிவந்துள்ளது. இந்த நூலை யார் வேண்டுமானாலும் எளிதாக படிக்கலாம், இதற்கு வசதியாக நூலிலேயே அட்டவணையும் கொடுத்துள்ளேன்.

குறிப்பாக தமிழ் பிராமி எழுத்துக்களில் வெளியிட காரணம், நமது முன்னோர்கள் முற்காலத்திலேயே எவ்வளவு வலிமையான எழுத்து வடிவத்துடன் இருந்திருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக உள்ளது. இதை தற்போது இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நாம் அனைவரும் அறிந்த திருக்குறளை தமிழ் பிராமி எழுத்துக்களை கொண்டு எழுதி உள்ளேன்.
ஒரு மொழி சைவத்தில் இருந்து ஒளி வடிவத்துக்கு வந்து அது எழுத்தாகி வார்த்தையாகி வரி வடிவத்திற்கு வளமையான இலக்கணத்துடன் வரவேண்டுமென்றால் அதற்கு பல ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்கின்றனர் மொழியியல் வல்லுனர்கள்.

நமது தமிழ்மொழி 3000 ஆண்டுகளுக்கு முன்பே அந்த நிலையை எட்டிவிட்டது என்றால் நமது ஆளுமைதான் மிகச் சிறப்பான விஷயமாக உள்ளது. இதை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்பதுதான் இந்த நூலின் நோக்கம் என்றார் புன்முறுவலுடன்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.