மகன் உட்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள்| Dinamalar

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தவரை கொலை செய்த மகன் உட்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த மட்டிகைக்குறிச்சியைச் சேர்ந்தவர் சின்னசாமி மகன் வெங்கடேசன், 41; அதே ஊரைச்சேர்ந்தவர் கண்ணுபிள்ளை மனைவி தங்கம். இவர், 2018ம் ஆண்டு வெங்கடேசனிடம் வீடு கட்டுவதற்காக பண உதவி கேட்டுள்ளார். தங்கம் சொத்து பத்திரம் கொடுத்தார். அதனை வெங்கடேசன் தெரிந்த நபரிடம், அடமானம் வைத்து, 50 ஆயிரம் ரூபாய் வாங்கி தங்கத்திடம் கொடுத்துள்ளார். இதையடுத்து இருவருக்குமிடையே பழக்கமாகி கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில், 2019 மார்ச் 25ம் தேதி, தங்கம் மகன் சிவா, 22; தனது நண்பர் சடையம்பட்டு பெரியசாமி மகன் வெற்றிவேல், 28; என்பவருடன் வெங்கடேசன் வீட்டிற்குச் சென்றார்.

ரூ. 53 ஆயிரம் கொடுத்து சொத்து பத்திரத்தை மீட்டுத் தருமாறு கேட்டுள்ளார்.பத்திரத்தை மீட்ட வெங்கடேசன், சிவாவிடம் தராமல் மறுநாள் 26ம் தேதி அவரது தாய் தங்கத்திடம் கொடுத்துள்ளார். இதற்கிடையே தாயுடன் வெங்கடேசன் வைத்துள்ள கள்ளக்காதல் விவகாரம் சிவாவிற்கு தெரியவந்தது.அன்று இரவு, 12:30 மணியளவில் சடையம்பட்டு கோமுகி ஆற்றின் அருகே வெங்கடேசன், சிவா, வெற்றிவேல் ஆகிய மூவரும் பேசி கொண்டிருந்தனர்.அப்போது சிவா, தாய் தங்கத்துடனான கள்ளத்தொடர்பு குறித்து வெங்கடேசனிடம் கேட்டுள்ளார். இதனால், வெங்கடேசன், சிவா இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த சிவா, வெற்றிவேல் சேர்ந்து பீர்பாட்டிலால் வெங்கடேசனைத் தாக்கிக் கொலை செய்தனர். கச்சிராயபாளையம் போலீசார், சிவா,, வெற்றிவேலை கைது செய்தனர்.இவ்வழக்கு விசாரணை கள்ளக்குறிச்சி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜவேல் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி கீதாராணி, குற்றவாளிகள் சிவா, வெற்றிவேல் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.மேலும் இருவருக்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகை கட்டத் தவறினால் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.