அவரின் பெயரை சூட்டுவது கூடுதல் பெருமை சேர்க்கும் – முதலமைச்சருக்கு மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தல்.!

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரர் இரா.ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும் என்று, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளாகம் கட்டி முடிக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இன்று திறந்து வைக்கப்படுவதில் மகிழ்ச்சி. அந்த வளாகத்திற்கு விடுதலைப் போராட்ட வீரரும், அறிஞருமான ஜமதக்கனியின் பெயர் சூட்டப்படுவது வளாகத்திற்கு கூடுதல் பெருமை சேர்க்கும்!

தமிழ்நாட்டில் விடுதலைக்காக போராடி அதிக காலம் சிறை தண்டனை அனுபவித்தவர் ஜமதக்கனி. மார்க்ஸ் எழுதிய Das Capital என்ற நூலை முதலில் தமிழில் மொழிபெயர்த்தவர் அவர். அனைத்துக்கும் மேலாக  தென்னாட்டு ஜான்சிராணி  கடலூர் அஞ்சலையம்மாளின்  மருமகன் ஜமதக்கனி!

நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் ஜமதக்கனி செய்த தியாகங்களும், படைத்த சாதனைகளும் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. அவரது பெருமைகளையும், சிறப்புகளையும் மக்களிடம்கொண்டு சென்று சேர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு!

இராணிப்பேட்டை ஆட்சியர் வளாகத்திற்கு ஜமதக்கனியின் பெயர் சூட்டும்படி 09.03.2020-இல் கோரிக்கை விடுத்தேன். இப்போது மீண்டும் வலியுறுத்துகிறேன்…. ஆட்சியர் வளாகத்திற்கு  ஜமதக்கனி பெயர் சூட்ட வேண்டும்; வளாகத்தில் அவரது சிலையையும் அமைக்க வேண்டும்” என்று மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.