தேசத்தை உலுக்கிய உதய்பூர் படுகொலை… மாநில காங்கிரஸ் அரசு, மத்திய பாஜக அரசுகளின் அணுகுமுறை எப்படி?

முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் ராஜஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படுகொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது. உதய்பூரில் உள்ள மால்தாஸ் பகுதியில் தையல் கடை நடத்திவந்தவர் கன்ஹையா லால். நேற்று முந்தினம் (ஜூன் 29-ம் தேதி) அவரின் கடைக்குள் வாடிக்கையாளர்களைப் போல நுழைந்த இரண்டு நபர்கள், அங்கு வேலை செய்துகொண்டிருந்த கன்ஹையா லாலை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர்.

அசோக் கெலாட்

பிறகு, கன்ஹையா லாலின் தலையை அவர்கள் துண்டித்துள்ளனர். அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உதய்பூரில் கடைகள் அடைக்கப்பட்டன. இணையதள சேவை முடக்கப்பட்டது.

பாஜக-வின் முன்னாள் செய்தித்தொடர்பாளரான நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்தை அந்த தையல் கடைக்காரர் ஆதரித்ததுதான், கொலைக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், முஸ்லிம்களின் இறைத்தூதர் முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை நுபுர் ஷர்மா தெரிவித்தார்.

அதற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல், இஸ்லாமிய நாடுகளிடமிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. நுபுர் ஷர்மாவின் அந்த கருத்துக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கன்ஹையா லால் கருத்து வெளியிட்டிருக்கிறார். அதனால் ஆத்திரமடைந்த அந்த நபர்கள், கன்ஹையா லாலை கொலை செய்திருக்கிறார்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நுபுர் சர்மா

கொலையாளிகள் இருவரையும் வீடியோ காட்சி மூலம் அடையாளம் கண்ட போலீஸார், அவர்களைக் கைது செய்தனர். உடனடியாக, சிறப்புப் புலனாய்வுப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவத்தில், பயங்கரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் விசாரிக்கப்படுவதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “உதய்பூரில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இது ஒரு சோகமான சம்பவம். தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். அதுவரை மாநில மக்கள் அமைதி காக்க வேண்டும்” என்று முதல்வர் அசோக் கெலாட் கூறியிருக்கிறார்.

அசோக் கெலாட்

மேலும், அச்சம் மிகுந்த ஒரு சூழலை உருவாக்குவதற்காகவே இந்தக் கொலை சம்பவம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதை ஆரம்பக்கட்ட விசாரணை மூலம் தெரியவந்திருக்கிறது என்றும் அசோக் கெலாட் கூறியுள்ளார். இந்தக் கொலை தொடர்பாக, பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. கொலைசெய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு ரூ.31 லட்சம் இழப்பீடு வழங்க ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்னொரு வீடியோவில், கத்தியைச் சுழற்றியவாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கும் அந்த நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தக் கொலைச் சம்பவத்தை சீரியஸாக அணுகும் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு, உதய்பூரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்ததுடன், மக்கள் கூடுவதற்கான தடையுத்தரவை மாநிலம் முழுவதும் பிறப்பித்துள்ளது.

அமித் ஷா

சமூகப் பதற்றத்தையும், இரு சமூகங்களிடையே பகையுணர்வையும் ஏற்படுத்தக்கூடிய இந்த சம்பவத்தில், மாநில அரசைப் போலவே, மத்திய அரசும் மிகவும் சீரியஸாகப் பார்க்கிறது. இந்த சம்பவம் குறித்து என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் கொலையில் தொடர்புடைய அமைப்பு பற்றியும், சர்வதேசத் தொடர்புகள் பற்றியும் முழுமையாக விசாரிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கொலையாளிகளில் ஒருவருக்கு பாகிஸ்தானில் செயல்படும் ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், அந்த நபர் 2014-ம் ஆண்டு கராச்சிக்கு சென்றுவந்ததாகவும் காவல்துறை தரப்பிலிருந்து ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.