முதல்வராக பட்னவிஸ்.. துணை முதல்வராக ஷிண்டே.. நாளை பதவியேற்பு விழா!

மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக, பாஜகவைச் சேர்ந்த, முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அவரது கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே போர்க்கொடி தூக்கினார். மேலும், தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு, அசாம் மாநிலம் கவுகாத்தியில் தஞ்சம் அடைந்தார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத உத்தவ் தாக்கரே, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனார். உச்ச நீதிமன்றமும் மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தடையில்லை என அதிரடியாக நேற்றிரவு உத்தரவிட்டது. இதை அடுத்து, மகாராஷ்டிர மாநில மக்களிடையே உரையாற்றிய உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் பதவி மற்றும் எம்எல்சி பதவியை ராஜினாமா செய்வதாகவும், தன்னுடன் இருந்தவர்களே தன்னை ஏமாற்றி விட்டனர் என்றும் உருக்கமாகத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தின் தனிப் பெரும் கட்சியாக 105 எம்எல்ஏக்கள் பலத்துடன் உள்ள பாஜக, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவுடன், மீண்டும் ஆட்சி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் இன்று, பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னவிஸை, மும்பையில் உள்ள அவரது வீட்டில், ஏக்நாத் ஷிண்டே சந்தித்துப் பேசினார். அப்போது, எம்எல்ஏக்கள் ஆதரவு கையெழுத்துடன், மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இவர்கள் இருவரும், விரைவில், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக, மூன்றாவது முறையாக, பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்க உள்ளார். சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு, துணை முதலமைச்சர் பதவியும், அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலருக்கு, அமைச்சரவையில் இடம் அளிக்க பாஜக முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.