4ம் தேதி பலப்பரீட்சை – மெஜாரிட்டியை நிரூபிப்பாரா ஏக்நாத் ஷிண்டே?

வரும் 4 ஆம் தேதி, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டு உள்ளார்.

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றிருந்த அக்கட்சியைச் சேர்ந்த மூத்தத் தலைவர் ஏக்நாத் ஷிண்டே, முதலமைச்சராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதை அடுத்து, பெரும்பான்மை இல்லாததை உணர்ந்த உத்தவ் தாக்கரே, அண்மையில், முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியாக இருந்த பாஜக உடன் கூட்டணி அமைத்து, மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைக்க, சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்தார். இதற்கு பாஜக பச்சைக் கொடி காட்டியது. இதன்படி, மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார். துணை முதலமைச்சராக, தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்றார். மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றாவது முறையாக தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்பார் என, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏக்நாத் ஷிண்டேவுக்கு, முதலமைச்சர் மகுடம் கிடைத்தது.

இந்நிலையில், வரும் திங்கட்கிழமை மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, புதிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து, இடைக்கால சபாநாயகரை தேர்வு செய்யும் வேலைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே, மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்குள் நுழைய மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு தடை விதிக்கக் கோரி, உத்தவ் தாக்கேர தரப்பினர் தாக்கல் செய்த மனு, வரும் 4 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.