இராமேஸ்வரம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் இளைஞர் தற்கொலை

தமிழகத்தின் இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் முகாமில் செல்போனில் வீடியோ கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் மகன் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் கடந்த 2006 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்துவரும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டதாக இந்திய ஊடமொன்று செய்தி வெளியிட்டுள்ளது

ராணியின் மகனான 22 வயதுடைய இளைஞர் நிரோஷன் பெயிண்டிங் வேலை செய்து வந்துள்ளார்.நிரோஷன் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு செல்போனில் கேம் விளையாடி சுற்றித் திரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த ராணி தனது மகனை கேம் விளையாடுவதை விட்டுவிட்டு வேலைக்குச் செல்லுமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, தாயின் கண்டிப்பால் மனம் உடைந்த நிரோஷன் வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை தண்ணீரில் கலந்து வீட்டிற்கு பின்புறம் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடித்துள்ளார்.

மயக்க நிலையில் இருந்த நிரோஷனை அவரது நண்பர்கள் மண்டப அரசு மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர், தனியார் வாகனம் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உள்நோயாளியாக சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நிரோஷன் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, உயிரிழந்த இளைஞரின் உடல் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டு வரும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதுகுறித்து உயிரிழந்த இளைஞரின் சகோதரி பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருவதாக ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.