தேசிய போலீஸ் அகாடமி இயக்குனராக தமிழக ஐ.பி.எஸ்: யார் இந்த சேர்மராஜன்?

Sermarajan IPS from Tamilnadu appointed as Director of National Police Academy: தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும், ஐ.பி.எஸ் அதிகாரியுமான சேர்மராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் நேஷனல் போலீஸ் அகாடமியின் இயக்குனராக 1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியும், புலனாய்வுப் பிரிவின் சிறப்பு இயக்குநருமான ஏ.எஸ் ராஜன் என்ற சேர்மராஜன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சேர்மராஜன், தென் மாவட்டமான தேனியில் வணிகர் குடும்பத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் மறைந்த எஸ்.கே.அய்யாசாமி மற்றும் ஏ.ரத்தினம்மாள்.

இதையும் படியுங்கள்: ஜி.எஸ்.டி சாலையில் மேலும் ஒரு ‘U டர்ன்’: ஆலந்தூர் டு கிண்டி பயணிகள் மகிழ்ச்சி

சேர்மராஜன், பத்தாம் வகுப்பு வரை தேனி மாவட்டம் ஓடைப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர், தேனியில் உள்ள நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்தார். தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ள ஹாஜி கருத்த ரௌத்தர் ஹவுதியா கல்லூரியில் வரலாற்றில் பட்டப்படிப்பை முடித்த சேர்மராஜன், மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வரலாற்றில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியான சேர்மராஜன் 1987 இல் தனது முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஐ.பி.எஸ் மற்றும் பீகார் கேடர் ஒதுக்கப்பட்ட சேர்மராஜன், பிரிக்கப்படாத அப்போதைய பீகாரில் உள்ள ராஞ்சியில் பயிற்சி ஐ.பி.எஸ் அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது முதல் வழக்கமான பணி சசாரத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக இருந்தது. காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற அவர், ரோஹ்தாஸ் மாவட்டத்தின் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டார்.

பீகாரின் சில கடினமான காவல் மாவட்டங்களான ரோஹ்தாஸ், பகல்பூர், முசாபர்பூர், ஜெகனாபாத் மற்றும் கிழக்கு சம்பாரண் போன்றவற்றில் பணியாற்றியவர் சேர்மராஜன்.

சேர்மராஜன், சட்டம் ஒழுங்கு, குற்றம் மற்றும் தேர்தல்களில் கள நிபுணர். பீகாரில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய பின்னர், மத்திய அரசுப் பணிக்குச் சென்ற சேர்மராஜன், 1999 இல் புலனாய்வுப் பணியகத்தில் சேர்ந்தார். ஐ.பி.,யில், புது தில்லி, தமிழ்நாடு, குஜராத், லடாக் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற இடங்களில் பணியாற்றினார். லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திலும் சேர்மராஜன் மூன்றாண்டு காலம் பணியாற்றினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.