44 வயசாகிடுச்சி : வயதை வெளிப்படையாகச் சொன்ன பூஜா

சினிமாவில் சில நல்ல படங்களில், சில நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் சிலரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக முன்னேறி இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒருவர் தான் பூஜா. 2003ல் சரண் இயக்கத்தில் மாதவன் ஜோடியாக 'ஜே ஜே' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். அழகுடனும், கிளாமருடனும் முதல் படத்திலேயே கவனிக்கப்பட்டவர்.

அதன் பின் அஜித் ஜோடியாக 'அட்டகாசம்' படத்தில் கூட நடித்தார். பின்னர் ''பட்டியல், பொறி, ஓரம் போ, நான் கடவுள்” உள்ளிட்ட படங்களில் நடித்தார் பூஜா. இதில் 'நான் கடவுள்' படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து நடிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் விட்டுவிட்டார் பூஜா.

இலங்கையில் பிறந்து வளர்ந்தவர் பின்னர் பெங்களூருவில் கல்லூரிப் படிப்பை முடித்த பின் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அம்மா இலங்கை, அப்பா கர்நாடகா. சிங்கள பிசினஸ்மேன் ஒருவரைத் திருமணம் செய்து கொண்ட பூஜா, தற்போது கிறிஸ்துவ மதத்தைத் தழுவி, தன் சமூக வலைத்தளங்களில் அது பற்றிய பதிவுகளைத்தான் அதிகம் போட்டு வருகிறார்.

நேற்று ஒரு ரசிகர், “ஒரு காலத்தில் ஒரு கோஸ்ட் இருந்தது” என பூஜாவின் சில புகைப்டங்களைப் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த பூஜா, “நான் டுவிட்டரில் ஆக்டிவ்வாக இல்லை. என்னை ஞாபகம் வைத்திருப்பதற்கு நன்றி. ஒவ்வொருவருக்கும் எனது அதிகமான அன்பு, நீங்கள் அனைவரும், நலத்துடனும், மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் இருக்க கடவுள் ஆசீர்வதிக்கட்டும்,” என பதிலளித்திருந்தார்.

மற்றொரு ரசிகர் மீண்டும் வாருங்கள் எனக் கேட்டிருந்தார். அதற்கு பூஜா, “ஐயோ, வயதாகிவிட்டது, 44 வயசாகிடுச்சி. திரும்ப வருவதென்றால், சித்தி கதாபாத்திரம்தான் பண்ணனும்,” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.

தன்னுடைய வயதை எந்த ஒரு நடிகையும் வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். ஆனால், பூஜா அப்படி சொன்னது ஆச்சரியம்தான்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.