கரூர்: வாட்ஸ்அப் மூலம் மாணவிக்குப் பாலியல் தொல்லை; தமிழ் ஆசிரியரை தாக்கிய பெற்றோர்! – நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சேங்கல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில், சுமார் 500 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு 10-க்கும் மேற்பட்டவர்கள் உரிமையாளர்களாக உள்ளனர். இந்த நிலையில், இந்தப் பள்ளியில் பத்தாம் வகுப்பிற்குத் தமிழ் ஆசிரியராக நிலஒளி (வயது: 40) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், இந்தப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை மிரட்டி, கடந்த நான்கு மாதங்களாக மொபைலில் ஆபாசமாக வீடியோ எடுத்தும், நேரடியாக வீடியோ பதிவிடச் செய்தும் பாலியல் தொந்தரவு செய்ததாகச் சொல்லப்படுகிறது.

பத்தாம் வகுப்பு ஆரம்பத்திலிருந்து படிக்கும் மாணவியை மிரட்டியதாகவும், “இறுதி தேர்விற்கு உன்னை அனுப்பமாட்டேன். தேர்ச்சி பெறாத வகையில் செய்து விடுவேன்” என்று அந்த மாணவியை மிரட்டியதாகவும் தெரிகிறது. அதோடு, “உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்” என்று அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார்.

நிலஒளி (தமிழ் ஆசிரியர்)

தன்னை மிரட்டிய ஆசிரியருக்குப் பயந்த அந்த மாணவி கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக ஆசிரியர் சொல்வதை அனைத்தையும் செய்துள்ளார். அதோடு, அந்த ஆசிரியர் அவரது செல்போன் வாட்ஸ்அப்பில் வீடியோவாக காண்பிக்கச் சொல்லி மிரட்டி உள்ளார். வாட்ஸ் அப்பில் வீடியோவை பதிவிடச் சொல்லியும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணவியின் பெற்றோருக்குச் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, மொபைல் போனை ஆராய்ந்து பார்த்ததில் ஆசிரியர் பாலியல் தொல்லை தொடர்ந்து கொடுத்து வந்தது தெரியவந்துள்ளது. உடனடியாக, நேற்று மாணவியின் பெற்றோர், உறவினர்கள் அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு, ஆசிரியரைச் சிறைபிடித்து தரையில் அமரவைத்து அடித்து உதைத்தனர்.

நிலஒளி (தமிழ் ஆசிரியர்)

இந்த விவகாரத்தை அறிந்த லாலாபேட்டை காவல் நிலைய போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால், “உரிய நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மட்டுமே இவரை அனுப்ப முடியும்” என உறவினர்கள் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து, 5 மணி நேரத்திற்கு மேலாகப் பெற்றோர், உறவினர்கள் ஆசிரியரைச் சிறை பிடித்து பள்ளியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பஞ்சப்பட்டி சாலையில் சாலை மறியல் செய்தும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இரவு நேரம் நெருங்கிய நிலையிலும் பள்ளி நிர்வாகத்தினர் ஒருவர்கூட வராததால், கடும் கோபமடைந்த பொதுமக்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். “ஆசிரியரைக் கைதுசெய்து சிறையில் அடைக்க வேண்டும். பள்ளி நிர்வாகத்தின்மீது நடவடிக்கை எடுத்து பள்ளியை இழுத்து மூட வேண்டும்” எனக் கோரிக்கையை வைத்துத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது

இந்த தொடர் போராட்டத்தால் கூடுதலாக லாலாபேட்டை காவல் ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்ததின் பேரில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரைக் கைதுசெய்து அழைத்துச் சென்றனர். அவர்மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீஸார், தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.