குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு, பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவும் தங்களுக்கான ஆதரவைத் திரட்ட அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து வருகின்றனர்.
அண்மையில்கூட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை, யஷ்வந்த் சின்ஹா சென்னையில் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
அதைத் தொடர்ந்து, திரௌபதி முர்மு, தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தருமாறு எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் உரையாடியதாகச் செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலாகின.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பி-யுமான ஜெய்ராம் ரமேஷ், இத்தகைய செய்திக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு கோரி ராகுல் காந்தி, தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகப் பிரபல நாளிதழில் செய்தி வெளியாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது முற்றிலும் தவறான பொய் செய்தி. அப்படி ஒரு தொலைபேசி உரையாடல் நிகழவே இல்லை. தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி இடையே குழப்பத்தை விளைவித்து அதை வலுவிழக்கச் செய்யும் எந்தவொரு மோசமான முயற்சியையும் எதிர்கொள்ளும் அளவுக்கு எங்கள் கூட்டணி வலுவாகவே இருக்கிறது” என ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டிருக்கிறார்.