அமெரிக்க குடியுரிமையை அதிகம் விரும்பும் இந்தியர்கள்..!

வாஷிங்டன்,

கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு மத்தியில் நடப்பு நிதி ஆண்டில் இந்தியர்கள் பலரும் அமெரிக்க குடியுரிமையை விரும்பி பெற்றுள்ளனர். அமெரிக்கா 246-வது சுதந்திரதினத்தை கொண்டாடி வருகிறது. அமெரிக்க குடியுரிமை பெறும் வெளிநாட்டினரை ஆண்டு தோறும் ஜூலை மாதம் வரவேற்பது வழக்கம்.

அந்த வகையில் 32 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் குடியுரிமை பெற அதிகம் விரும்பி வரும் வெளிநாட்டினரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மெக்சிகோவுக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர். நடப்பு நிதி ஆண்டில் சுமார் 6 லட்சம் வெளிநாட்டவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள அந்நாட்டு குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் மையம் கடந்த நிதி ஆண்டில் சுமார் 8 லட்சம் வெளிநாட்டவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளது. செப்டம்பருடன் நடப்பு நிதி ஆண்டு நிறைவு பெறும் என்பதால் எஞ்சியுள்ள 3 மாதங்களில் மேலும் பல வெளிநாட்டவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெற்ற டாப் 5 வெளிநாட்டவர்களின் பட்டியலில் மெக்சிகோ, இந்தியா, பிலிப்பைன்ஸ், கியூபா, டொமினிக்கன் குடியரசு நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டும் 34 சதவீதம். அமெரிக்காவில் 5 ஆண்டுகள் தொடர்ந்து வசித்திருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து விண்ணப்பிப்பவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.