சிங்கப்பூர் அதிபருக்கு கொரோனா பாதிப்பு| Dinamalar

சிங்கப்பூர் : சிங்கப்பூரில், அதிபர், பார்லி., சபாநாயகர், ஒரு அமைச்சர் ஆகிய மூவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின் அதிபரான ஹலிமா யாக்கோப், 67, தான், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தடுப்பூசி மற்றும் ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்திக் கொண்டதால், லேசான காய்ச்சல் அறிகுறிகளுடன் பாதிப்பு குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த வாரம் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.

சிங்கப்பூர் பார்லி., சபாநாயகர் டேன் சுவான்ஜினும், 53, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் கடந்த இரண்டு நாட்களாக பார்லி., கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதே போல சிங்கப்பூர் கலாசாரத் துறை அமைச்சர் எட்வின் டாங்கும், 52, கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கடந்த 28 நாட்களில் ஒரு லட்சத்து, 41 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு 2019 முதல், 14 லட்சத்து 73 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.