கோடநாடு குற்றவாளிகளை வெளியுலகிற்கு கொண்டுவருவதே அதிமுக தொண்டர்களின் எண்ணம்: ஓபிஎஸ் தரப்பு

சென்னை: “எங்களை அரசியலில் வளர்த்து ஆளாக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு வீட்டில் நடந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து, வெளியுலகிற்கு கொண்டு வர வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் எண்ணம்” என்று ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இது தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது “நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிப்போம். பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி நீதிமன்றம் சென்றுள்ளோம். உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறியுள்ளது.

கோடநாடு வழக்கில் உண்மையான குற்றவாளியை தமிழக அரசு கண்டுபிடித்து, நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்று பல பேர் கோரிக்கை வைக்கின்றனர். எங்களை அரசியலில் வளர்த்து ஆளாக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் நடந்த சம்பவத்தின், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, வெளியுலகிற்கு கொண்டுவர வேண்டும் என்பதுதான் அதிமுக தொண்டர்களின் எண்ணம்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.