அதிமுக: “சிலரின் சுயநலத்துக்காக கட்சியை கூறுபோடும் நிலை உருவாகிவிட்டது" – சசிகலா ஆதங்கம்

தமிழகத்தில் புரட்சிப்பயணம் மேற்கொண்டு வரும் வி.கே.சசிகலா, கடந்த 5-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது நாள் பயணமாக நேற்று(07.07.2022) மாலை வானூர் அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, “இந்த கழகம் எத்தகைய சூழ்நிலையில் தொடங்கப்பட்டது… எத்தகைய வன்முறைகளை, அராஜகங்களை எதிர் கொண்டது என்பதெல்லாம் மக்களாகிய உங்களுக்கு தெரியும். 1972-ல் தொடங்கி… குண்டர்களாலும், ரெளடிகளாலும், ஏன்… அன்றைய தி.மு.க அரசின் காவல் துறையினராலும் எத்தனை கழகத் தொண்டர்களின் உயிர்கள் பறிபோயின. எத்தனை தொண்டர்களின் கை, கால், மண்டைகள் உடைந்து ரத்தம் சிந்தினார்கள் என்பதையும் அறிவோம்.

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் சசிகலா

தொண்டர்கள் சிந்திய வியர்வையாலும், இரத்தத்தாலும் தான் இந்த அதிமுக கழகம் உருவானது. புரட்சித்தலைவரை ஒரு சமயத்தில் கொல்ல முயற்சி செய்தார்கள். எத்தனையோ தொண்டர்கள் மீது, பொய் வழக்குகளை திமுக ஆட்சியில் போட்டுப் பார்த்தார்கள். புரட்சித் தலைவரின் மறைவுக்கு பிறகு, பிளவுபட்ட நம் கழகத்தை மீண்டும் ஒன்றாக கட்டமைக்க அம்மா அவர்கள் எதிர்கொண்ட துன்பங்கள், துயரங்கள், சோதனைகள் அனைத்தையும் உடனிருந்து பார்த்தவள் நான். அம்மா அவர்களை ஒரு பெண் என்றும் பாராமல், சட்டசபையிலே சேலையைக் கிழித்து அநாகரிகமாக தாக்குதல் நடத்தினார்கள் தி.மு.க மந்திரிகள். அதேபோல அம்மாவும் நானும் புதுவையில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய போது, அதிகாலை நேரத்தில் நாங்கள் வந்த வாகனத்தின் மீது லாரியை விட்டு மோதி எங்களை கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.

நாங்கள் இரண்டு பெண்கள், எத்தனையோ அரசியல் பிரச்னைகளுக்கு மத்தியில் துணிச்சலோடு போராடி, எல்லா விதமான சோதனைகள் வழக்குகள் அனைத்தையும் எதிர்கொண்டு, இரண்டாக பிரிந்த கழகத்தை ஒன்று சேர்த்து நாட்டிலேயே 3-வது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தை பெற்றோம். ஆக, இதுபோன்ற அடக்கு முறைகளுக்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து அரசியல் களத்தில் போராடிக் கொண்டு, ஒரு வீர தமிழச்சியாக உங்கள் முன் இன்றைக்கு நான் வந்து நிற்கிறேன். அம்மா உடனான எனது நட்பு உண்மையானது, புனிதமானது. என்னை, அம்மாவிடமிருந்து பிரித்துவிடலாம் என்றும், அவ்வாறு செய்வதின் மூலம் அம்மா அவர்களை அரசியலில் இருந்து அப்புறப்படுத்திவிடலாம் அ.தி.மு.க-வை அழித்துவிடலாம் என்று அரசியல் எதிரிகள் நினைத்தார்கள். ஆனால், அதில் அவர்கள் தோற்றுப் போனார்கள்.

சசிகலா

10 கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்து நின்ற போதும், பெரிய கூட்டணி ஏதுமின்றி மக்கள் கூட்டணியோடு வென்ற அ.தி.மு.க… இன்று கடும் சோதனைக்கு ஆளாகி இருக்கிறது. தொடர் வெற்றிகளையே பார்த்த அ.தி.மு.க… இன்று தொடர் தோல்விகளையே சந்தித்து வருகிறது. சிலரின் தனிப்பட்ட சுயநலத்திற்காக கட்சியை கூறுபோடும் நிலை உருவாகிவிட்டது.

இந்த நிலை மாற வேண்டுமென்றால், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்த தலைமையானது, புரட்சி தலைவரின் சட்ட விதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ஒட்டுமொத்த அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு பெற்ற தலைமையாகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு தலைமையால் தான் பொதுமக்களின் ஆதரவுகளையும் பெற முடியும். அதன் மூலமாகத்தான் அடுத்தடுத்த தேர்தல்களில் அ.தி.மு.க வெற்றி பெறமுடியும்.

எந்த தி.மு.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க தொடங்கப்பட்டதோ… அந்த தி.மு.க ஆட்சிக்கு எதிராக குரல் கொடுக்க கூட தயங்குபவர்களால் இயக்கத்திற்கு எந்த பயனும் ஏற்பட போவதில்லை. இன்றைக்கு… கழகத் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், ஒரு சிலர் பேசிக் கொண்டிருப்பதால் எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுமானால் மனநிறைவையும், சந்தோஷத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அ.தி.மு.க தொண்டர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாக தான் இருக்கிறது. என்னை சந்திக்கும் தொண்டர்களும் இதையே தான் தெரிவிக்கிறார்கள். “நான் பெரியவன்…” “நீ பெரியவன்…” என இவர்கள் பதவிக்காக சண்டை போடுகின்ற செயல், கட்சியை அழிவுப்பாதைக்கு தான் கொண்டுசெல்லும் என்று அப்பாவித் தொண்டர்கள் வருத்தப்படுகிறார். மீண்டும் கழகம் வெற்றிப்பாதையில் பயணிக்கும். அதற்கு உங்கள் சகோதரியாகிய நான் பாடுபடுவேன், இது நிச்சயம் உறுதி.

எடப்பாடி பழனிசாமி – சசிகலா – ஓ.பன்னீர்செல்வம்

அதேபோன்று, மற்றவர்களைப் போல நேற்று ஒரு பேச்சு… இன்று ஒரு பேச்சு என நான் பேசமாட்டேன். எனவே, காலம் சென்ற இரு பெரும் தலைவர்களின் வழியில் நான் பாடுபடுவேன். தி.மு.க ஆட்சிக்கு வந்த 13 மாதங்களில்… தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தி.மு.க-வினரின் அராஜகச் செயல்களும், அத்துமீறல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் நிம்மதி இல்லாமல் இருப்பதை தான் பார்க்க முடிகிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் தி.மு.க அரசு, ‘தான் உண்டு… தன் குடும்பம் உண்டு…’ என இருப்பதாக பொதுமக்கள் கருதுகிறார்கள். இந்த ஆட்சியாளர்களை பற்றி தமிழக மக்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது. எனவே, இந்த மக்கள் விரோத அரசை நம்பினால் இதைவிட மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை உணர்ந்து இவர்களை விட்டு விலக ஆரம்பித்துவிட்டார்கள். யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் காலம் கனியும்போது, நம் ஆட்சி மீண்டும் வரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதுவே மக்களுக்கான ஆட்சியாக இருக்கும்” என்றார்.

அதனைத் தொடர்ந்து கிளியனூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “எம்.ஜ.ஆரின் சட்டத் திட்டத்தின்படி நான் கழகத்தின் பொதுச்செயலாளர். எங்களுடைய கட்சிக்கு ஏதும் ஆகாது. அம்மா எப்படி கட்சியை ஒன்றுபடுத்தி வெற்றிவாகை சூடினார்களோ.. அதுபோல மீண்டும் நாங்கள் ஒன்று சேர்ந்து, அடுத்த ஆட்சி அ.தி.மு.க ஆட்சியாக அமைத்து காட்டுவோம். அதை நிச்சயம் நான் கொண்டு வருவேன். அ.தி.மு.க பிளவுப்படுவது பி.ஜே.பி-யின் வளர்ச்சி என்பதை, என்னை பொறுத்தமட்டில் அப்படி நான் நினைக்கவில்லை. அ.தி.மு.க-வை பொறுத்தவரை, மேல்மட்டத்தில் உள்ள தலைவர்கள் “நீயா… நானா…” என்று போட்டி போடுகிறார்கள். அவ்வளவுதானே தவிர, தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வை யாரும் வீழ்த்த முடியாது. எதுவும் அ.தி.மு.க-வின் எதிர்காலத்தை பாதிக்கும் அளவிற்கு நான் விட்டுவிட மாட்டேன். வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும். தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னது போல, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.

சசிகலா பேட்டி

அ.தி.மு.க ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சியாக மாறினால் அது தவறுதான். அதுபோல கொண்டுபோக நினைக்கிறார்கள், அது நிச்சயம் நடக்காது. அ.தி.மு.க எல்லோருக்கும் பொதுவானது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.