ஓடிடியில் வெளியான பிறகும் தியேட்டர்களில் தொடரும் 'விக்ரம்'

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'விக்ரம்'. இப்படம் வெளிவந்து ஐந்து வாரங்கள் முடிந்து ஆறாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று ஓடிடி தளத்திலும் படம் வெளியாகிவிட்டது.

இருப்பினும் தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பல தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இது திரையுலகத்தினரை ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஏற்கெனவே மொத்தமாக 400 கோடி வசூலைப் பெற்றுள்ள 'விக்ரம்' படம் இன்னும் அதிகபட்சமாக ஒரு வாரம் வரை தியேட்டர்களில் ஓட வாய்ப்பிருக்கிறது.

விஜய், அஜித் இருவர்தான் பாக்ஸ் ஆபீஸில் இப்போது அதிக வசூலைப் பெறுபவர்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் சீனியர் நடிகரான கமல்ஹாசன் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளார். தமிழில் 200 கோடி வசூலை நெருங்கி வருவதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வசூலைக் கடக்குமா என்பது படம் ஓடி முடிக்கும் போதுதான் தெரியும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.