ராமநாதபுரத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரண்டு பேருக்கு மண்டை உடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் பேருந்து நிலையம் அருகே தனியார் திருமண மஹாலில் அதிமுகவின் ஒற்றை தலைமையை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி தலைமையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின்போது ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் உள்ளே புகுந்தனர். எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமை கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறியதை அடுத்து, ஓபிஎஸ் தரப்பினர் ரகளையில் ஈடுபட்டு கட்சி நிர்வாகிகள் அமர்வதற்காக போடப்பட்டிருந்த நாற்காலிகளை தூக்கி வீசி ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்களிடையே ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர்.
இதில் இபிஎஸ் தரப்பைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கு மண்டை உடைக்கப்பட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் ஒரு கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. பின்னர் அதிமுகவின் ஒற்றை தலைமை வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. அதில் தமிழக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியை ஒற்றை தலைமையாக கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றினர்.
மேலும் அதிமுக ஒற்றை தலைமை வலியுறுத்தி நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னுடைய ஆதரவாளர்களை அனுப்பி கூட்டத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் நடந்து கொண்டதை அடுத்து அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். அத்துடன் அதனை தலைமை கழக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்கலாமே : பொதுக்குழு பணிகளை பார்வையிட்டபோது தவறி கீழே விழுந்த நத்தம் விஸ்வநாதன்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM