புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும். 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதையடுத்து 25ம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் புதிய குடியரசுத் தலைவர் பதவி ஏற்பார். குடியரசு துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 6ம் தேதி நடைபெறும். புதிய குடியரசு துணைத் தலைவர் ஆகஸ்ட் 11-ம் தேதி பதவியேற்பார். இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் முன்னதாக பாஜக எம்பிக்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா விருந்து அளிக்கவுள்ளார். இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறுகையில், ‘அனைத்து பாஜக லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்பிக்களும் வரும் 16ம் தேதி முன் டெல்லி வந்துசேர கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அன்றிரவு பாஜக எம்பிக்கள் அனைவருக்கும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா விருந்து அளிக்கவுள்ளார்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையே இன்று மாலை 4.30 மணியளவில் மாநிலங்களவைக்கு புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களை பிரதமர் மோடி சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார். இன்று மாநிலங்களவையில் ஒன்றிய அமைச்சர்கள் பியூஸ் கோயல், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 24 பேர் எம்பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர். மற்றவர்கள் வரும் 18ம் தேதி எம்பிக்களாக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.