‛பொன்னியின் செல்வன்' டீசர் வெளியீடு : எதிர்பார்ப்பை எகிற வைக்கும் சோழ சாம்ராஜ்யம்

கல்கி எழுதிய சரித்திர நாவலான 'பொன்னியின் செல்வன்' தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்ய லட்சுமி, பார்த்திபன் என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதல்பாகம் செப் ., 30ல் வெளியாக உள்ளது.

கடந்த சில நாட்களாக படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களின் அறிமுக போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்தவகையில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், வந்தியதேவனாக கார்த்தி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவையாக திரிஷா, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இப்படத்தின் டீசர் மாலை 6 மணியளவில் 6 மொழிகளில் வெளியானது. தமிழ் டீசரை சூர்யாவும், தெலுங்கு டீசரை மகேஷ்பாபுவும், மலையாள டீசரை மோகன்லாலும், கன்னட டீசர் ரக்ஷித் ஷெட்டியும், ஹிந்தி டீசரை அமிதாப் பச்சனும் வெளியிட்டனர்.

பொன்னியின் செல்வன் படம் சோழ சாம்ராஜ்ஜியத்தின் சரித்திர கதை என்பதால் அதற்கு ஏற்றபடி காட்சிகளை உருவாக்கி உள்ளார் மணிரத்னம். பிரம்மாண்ட கோட்டைகள், அரண்மனைகள், போர்க்காட்சிகள், கடற்கரை ஒட்டிய பகுதிகளில் நடக்கும் போர்க்களம் என டீசரில் பிரம்மாண்டத்தை காட்டி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளார் மணிரத்னம். மேலும் படத்தில் நடித்துள்ள முக்கிய கேரக்டர்கள் அனைவரையும் ஒரு காட்சியில் வருவது போன்று டீசரை வடிவமைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் டீசருக்கு உயிர் கொடுத்துள்ளது.

டீசர் லீக்
6மணிக்கு பொன்னியின் செல்வன் டீசர் வெளியாகும் என அறிவித்திருந்தனர். ஆனால் ஒரு மணிநேரத்திற்கு முன்பாகே டீசர் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சி அளித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.