ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டது ஏன்? – கொலையாளி பகீர் வாக்குமூலம்!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது திருப்தியில்லை எனவும், இதனால் அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக, கொலையாளி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, 67. இவர் 2012 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அந்நாட்டின் பிரதமராக பணியாற்றினார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உடல்நிலை காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் இன்று, நாரா என்ற பகுதியில் ரயில் நிலையம் அருகே, முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் மறைந்திருந்து துப்பாக்கியால் ஒருவர் சுட்டதில், அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனையில் ஷின்சோ அபே அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

BREAKING: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானார்

துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 41 வயது மதிக்கத்தக்க நபரை, சம்பவ இடத்தில், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கையினால் செய்யப்பட்ட துப்பாக்கியுடன் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது திருப்தியில்லை. இதனால், அவரை கொலை செய்ய விரும்பினேன்” என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த நபர், ஜப்பான் கடற்படையில் பணிபுரிந்தவர் எனவும், அவரது பெயர் டெட்சுயா யமகாமி எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, டெட்சுயா யமகாமி வீட்டில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.