`அமைச்சர்களின் பனிப்போர் முதல் திமுக எம்.எல்.ஏ-க்களின் அச்சம் வரை!' – கழுகார் அப்டேட்ஸ்

ரோடு போடும் துறை டெண்டர்களில் சமீப காலமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களுக்குப் பதிலாக, ‘அக்கட’ தேசத்து ஒப்பந்ததாரர்களையே அதிகம் பார்க்க முடிகிறதாம். கான்ட்ராக்ட் கிடைக்காத தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்கள் துறை அமைச்சரை அணுகியபோது, ‘கவலைப்படாதீங்க. வேறு ஒரு நல்ல துறையில் உங்களுக்கெல்லாம் டெண்டர் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொன்னாராம். சொன்னபடியே, ‘மேலிடத்தில்’ பேசி பெரிய காண்ட்ராக்டர்கள் சிலரை ‘ஷாக்’ அடிக்கும் துறை காண்ட்ராக்டர்கள் பட்டியலில் நுழைத்தும்விட்டாராம் அமைச்சர். சின்ன காண்ட்ராக்டர்களால் இப்படி துறை மாறி வேலை செய்வது கடினம் என்பதால், அவர்கள் நிர்க்கதியாக நிற்கிறார்கள். இன்னொரு பக்கம், புதிய ஒப்பந்ததாரர்களின் வரவு, ‘ஷாக்’ துறையில் ஏற்கெனவே ஒப்பந்தம் எடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறதாம். அவர்கள் தங்கள் துறை ‘அணில்’ அமைச்சரிடம் முறையிட, அவரோ விவகாரத்தை முதல்வர் வரை எடுத்துச்சென்றிருக்கிறார். இரு அமைச்சர்களுமே ஒரே இடத்திலிருந்து தி.மு.க-வுக்கு வந்தவர்கள்தான் என்றாலும், இந்தப் பனிப்போரின் முடிவுதான் தலைமையிடம் யாருக்குச் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கும் என்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ்நாடு சட்டமன்றக் குழு காங்கிரஸ் தலைவராக இருக்கும் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கமிட்டியில் மாநில எஸ்.சி/எஸ்.டி பிரிவுத் தலைவராகவும் இருந்தார். அவரது கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டு, மத்திய சென்னை மாவட்டத் தலைவராக இருந்த ரஞ்சன்குமார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தான் ஒரு காங்கிரஸ் லீடர் என்பதையே மறந்து, தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டன் போல செயல்பட்டதால்தான் இந்த நடவடிக்கையாம். பலகட்டப் போராட்டத்துக்குப் பின்னர்தான் இந்த மாற்றத்தையே அழகிரியால் நிகழ்த்த முடிந்தது.

செல்வப்பெருந்தகை

பொறுப்பில்தான் இல்லாவிட்டாலும், தனது ஆதரவாளர்களையாவது அதில் உட்காரவைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், புவனகிரி செந்தமிழ்ச்செல்வன், நெல்லை பாக்கியராஜ் ஆகியோரை எஸ்.சி/எஸ்.டி அணியின் மாநிலப் பொறுப்புக் கொண்டுவருவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் செல்வப்பெருந்தகை.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 418 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 6-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. உள்ளூர் அமைச்சர் மனோ தங்கராஜ் கிறிஸ்தவர் என்பதால், இந்த விழாவில் அவர் பங்கேற்கக் கூடாது என்று பல்வேறு இடையூறுகளைச் செய்தது பா.ஜ.க. அவருக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. ‘அமைச்சர் மனோ தங்கராஜ் திருவட்டாறு கோயிலுக்குச் செல்லத் தடையில்லை’ என மதுரை ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதால், பா.ஜ.க-வினர் வேறு விஷயங்களைக் கையில் எடுத்து சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக பிரசாரம் செய்துவருகின்றனர். கும்பாபிஷேகத்தன்று அனைவரும் கைகூப்பி நிற்க, அமைச்சர் மனோ தங்கராஜ் கைகளைக் கட்டியபடி நின்றுகொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ‘சுவாமியை கையெடுத்து கும்பிடாதவருக்கு கோயிலில் என்ன வேலை?’ என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.

மனோ தங்கராஜ்

பதிலுக்கு மனோ தங்கராஜ் திருநட்டாலம் சிவன் கோயிலில் பிரசாதம் பெற்றுவரும் போட்டோவைப் பதிவிட்டு, ‘பக்தி மனதில் இருந்தால்போதும்’ என்று அவரது ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்துவருகின்றனர். பொதுமக்களோ, ‘தங்கள் அரசியலுக்காக கன்னியாகுமரியை தொடர்ந்து மதப் பதற்றத்திலேயே வைத்திருக்கிறார்களே இந்த அரசியல்வாதிகள்!’ என்று புலம்புகிறார்கள்.

தி.மு.க-வில் உட்கட்சித் தேர்தல் மோதல்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஒன்றியங்களைக் கைப்பற்றுவதில் மாவட்டச் செயலாளரும், திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ-வுமான பூண்டி கலைவாணனுக்கும், ஐ.டி விங் மாநிலச் செயலாளரும், மன்னார்குடி எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி.ராஜாவுக்கும் இடையே பிரச்னை தொடர்கிறது. அவர்களிடையே மத்தியஸ்தம் செய்துவைக்கும்படி விசாரணைக்குழுவிடம் ஸ்டாலினே சொல்லியிருந்தாராம்.

அதன்படி இவர்களை ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் விசாரணைக்காக அறிவாலயத்துக்கு அழைத்திருந்தனர். அப்போது அவர்கள் முன்னிலையில் வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது. விசாரணைக் குழு முன்னிலையிலேயே கலைவாணனும், டி.ஆர்.பி.ராஜாவும் சண்டை போட்டுக்கொள்ள, பிரச்னையை மீண்டும் தலைவரின் கவனத்துக்கே கொண்டு சென்றிருக்கிறார்கள் விசாரணைக்குழுவினர். முடிவு இனி ஸ்டாலின் கையில்!

ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சித் திட்ட அலுவலரை மாற்றக் கோரி முதல்வர் அலுவலகத்துக்கு கடிதங்கள் பறந்துகொண்டிருக்கின்றன. பி.டி.ஓ-கள் மாற்றத்தின்போது தங்களுக்கு வேண்டிய பி.டி.ஓ-களையும் தங்கள் பகுதியிலும், தங்களுக்கு ஒத்துழைக்காத பி.டி.ஓ-க்ளை வேறு ஊருக்கும் மாற்றக் கோரி ஆளும் தரப்பு யூனியன் தலைவர்கள் கேட்டிருந்தார்களாம். அதை ஏற்காமல், தகுதி அடிப்படையில் பி.டி.ஓ-க்களை நியமித்தாராம் அந்த திட்டத் அதிகாரி.

அந்தக் கடுப்பில்தான் அவரை மாற்ற இவ்வளவு முயற்சிகளும் நடப்பதாகச் சொல்கிறார்கள் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள்!

தி.மு.க எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகள் குறித்து, தொகுதிவாரியாக உளவுத்துறை போலீஸார் ரகசியமாக தகவல்களை சேகரித்துவருகிறார்கள். மறுபக்கம், மருமகனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தனியார் நிறுவனமும் தகவல் சேகரிக்கிறது. இப்படிப் போட்டிபோட்டுக்கொண்டு எதற்காக வேவு பார்க்கிறார்கள்… என்ன செய்யக் காத்திருக்கிறார்களோ? என்ற அச்சம் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களிடம் தொற்றிக்கொண்டிருக்கிறது. ‘மகாராஷ்டிர பாணி’ சித்து விளையாட்டுக்களில் பா.ஜ.க ஈடுபடக்கூடும் என்கிற எச்சரிக்கையே இதற்கெல்லாம் காரணமாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.