இலங்கைக்கு இந்திய ஆதரவு உண்டு: வெளியுறவு அமைச்சகம்

புதுடெல்லி: இலங்கைக்கு இந்திய ஆதரவு எப்போதும் உண்டு என்று வெளியுறவுச் செயலர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசும் அந்நாட்டு மக்களும் எதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள் பற்றியும் நாம் அறிவோம். இலங்கை மக்கள் இந்தக் கடினமான காலத்தை கடந்துவர உதவி செய்து வருகிறோம்.

நெருங்கிய நட்பு நாடு என்ற வகையில் இலங்கைக்கு இந்தியா 3.8 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளைச் செய்துள்ளது. இலங்கையில் தற்போது நிலவும் சூழலையும் நாங்கள் உற்று நோக்கி வருகிறோம்.

இலங்கை மக்களின் உணர்வுகளை மதிக்கிறோம். அவர்கள் தங்கள் வளத்தை மீட்டெடுக்க, முன்னேற்றத்தை உறுதி செய்ய போராடுகின்றனர். மக்கள் முன்னெடுக்கும் ஜனநாயக முறையிலான போராட்டங்களை மட்டும் நாங்கள் ஆதரிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

இலங்கையில் மக்கள் முன்னெடுத்த மிகப்பெரிய போராட்டத்தின் விளைவாக அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்தார். நாடே திரண்டு வந்ததுபோல் தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகையை நோக்கி நேற்று மக்கள் படையெடுக்க போலீஸும் ராணுவமும் செய்வதறியாது திகைத்தது. அதன் விளைவு பொதுமக்கள் அதிபர் மாளிகையை தம் வசப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து வரும் 13ஆம் தேதி அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார். அதுபோல் அனைத்துக் கட்சி ஆட்சி அமைப்பு சாத்தியப்பட்டவுடன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ரணில் விக்கிரமசிங்கேவும் அறிவித்துள்ளார்.

இருப்பினும் அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில், இந்தியா இலங்கைக்கும், அந்நாட்டு மக்களுக்கும் ஆதரவுக் கரம் நீட்டுவதாகக் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.