கட்சி ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்தனர்: கோவாவில் 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய திட்டம்?

பனாஜி: கோவாவில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ள நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தை 7 பேர் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் 7 பேரும் பாஜகவில் சேர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கோவாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜக 25 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. 11 இடங்களில் வென்றகாங்கிரஸ், முக்கிய எதிர்க்கட்சியானது. தேர்தலின்போது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திகம்பர் காமத், தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால், அவருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை. பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்த மைக்கேல் லோபோ எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டார். அப்போது முதலே திகம்பர் காமத், கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கோவா சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் திகம்பர் காமத் உட்பட 7 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் 7 பேரும் பாஜகவில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியானது.மைக்கேல் லோபோவும் பாஜக வுடன் பேசி வருவதாக தகவல்கள் வெளியானது.

இதை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்தது. ஆளும் பாஜக திட்டமிட்டு இதுபோல வதந்திகளை பரப்பி வருவதாக கோவா காங்கிரஸ் தலைவர் அமித் பட்கர் தெரிவித்தார்.

இதனிடையே, மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நேற்றிரவு காங்கிரஸ் கூட்டம் நடந்தது. இதில், திகம்பர் காமத், மைக்கேல் லோலோ இருவரும் கட்சிக்கு எதிராக சதி செய்வதாக குற்றம்சாட்டப்ட்டது. இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோவை காங்கிரஸ் நீக்கியது.

இதனிடையே, சட்டப்பேரவைதுணைத் தலைவர் தேர்தல் நாளை(12-ம் தேதி) நடப்பதாக இருந்தது. அதற்கான அறிவிப்பை பேரவைத் தலைவர் ரமேஷ் தவாத்கர் நேற்று திடீரென ரத்து செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.