கோவையில் அதிமுக பிரமுகர் நிறுவனத்தில் 5-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

கோவை: கோவையில் அதிமுக பிரமுகர் தொடர்புடைய நிறுவனத்தில், ஐந்தாவது நாளாக இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

கோவை வடவள்ளியில் உள்ள தொண்டாமுத்தூர் சாலை, நாராயணசாமி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர். வரி ஏய்ப்பு தொடர்பாக, வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 6-ம் தேதி சந்திரசேகர் வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, பீளமேட்டில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் சந்திரசேகர் தொடர்புடைய தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 10) 5-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அந்த அலுவலகத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக நிறுவனத்தின் மேலாண் இயக்குநரான சந்திரபிரகாஷிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டு, விசாரித்து வருகின்றனர்.

மேலும், பீளமேடு கொடிசியா வர்த்தக மையம் அருகேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் உள்ள சந்திரபிரகாஷின் வீட்டிலும் இன்று (ஜூலை 10) 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

உதவியாளரின் சகோதரர் வீட்டில் சோதனை: முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷ். இவரது சகோதரர் வசந்தகுமார். இவரது வீடு குனியமுத்தூரில் உள்ளது.

இவரது வீட்டில் இன்று (ஜூலை 10) அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக ஆவணங்களின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.