சர்வதேச திரைப்பட விழா குழுவில் குஷ்பு

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய திரைப்பட விழா கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவாகும். இந்த விழாவில் உலகெங்கிலும் உள்ள திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும், திரைப்படங்களின் சிறப்பை வெளிப்படுத்தவும் இந்த விழா ஒரு தளமாக அமையும். மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமும், கோவா மாநில அரசும் இணைந்து இதனை நடத்துகிறது.

இந்த ஆண்டுக்கான விழா வருகிற நவம்பர் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி முடிவடைகிறது. இந்த திரைப்பட விழாவை நடத்துவதற்கான வழிகாட்டல் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில், தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தலைவராக இருப்பார். கோவா மாநில முதலமைச்சர் இணை தலைவராக இருப்பார். மத்திய மாநில துறை சார்ந்த அமைச்சர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்களுடன் சினிமா சார்ந்த கலைஞர்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.

அந்த வகையில் இந்த குழுவில் நடிகை குஷ்பு, மனோஜ் முன்டாஷிர், விபுல் அம்ருத்லால் ஷா, பிரசூன் ஜோஷி, பிரியதர்ஷன், ஹ்ரிஷிதா பட், வாணி திரிபாதி, கரண் ஜோஹர், சுக்விந்தர் சிங், நிகில் மகாஜன், ரவி கொட்டாரக்கரா, ஷூஜித் சர்கார், பாபி பேடி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.