சீர்காழியை அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக இருந்த ஒன்றியக்குழு உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் இரா.லலிதா தேர்தல் நடைபெற்ற வாக்குசாவடிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன் பின்னர், சீர்காழி புறவழிச்சாலை வழியாக மயிலாடுதுறை திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எருக்கூர் புறவழிச்சாலை பகுதியில் சிதம்பரம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரியின் பின்புறம், பரங்கிப்பேட்டை நோக்கி சென்ற கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது.
இதில் காரில் பயணம் செய்த உசைன், செல்லதங்கம், செரினாபானு ஆகிய 3 பேர் படுகாயமடைந்தனர். அவ்வழியாக சென்ற மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இதனை பார்த்தவுடன் தனது காரினை நிறுத்திவிட்டு, நேர்முக உதவியாளரின் காரில் காயமடைந்தவர்களை ஏற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதன் பின்னர், தலைமைமருத்துவரிடம் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சையளிக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியரின் இந்த மனிதாபிமான செயலை பொதுமக்கள் பாராட்டினர்.