இயக்குநர் பாரதிராஜாவின் `பசும்பொன்’ படத்தின் மூலம் டான்ஸ் மாஸ்டராக அறிமுகமானவர் ஸ்வர்ணா. தொடர்ந்து விஜயகாந்தின் `தமிழ்ச்செல்வன்’, சத்யராஜின் `வில்லாதி வில்லன்’ உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்கள் தமிழிலும் தெலுங்கு உள்பட இதர மொழிகளில் மொத்தம் 900 படங்களுக்கு மேல் நடன இயக்குநராக அசத்திய ஸ்வர்ணா, இப்போது முதல் முறையாக `நாதிரு தின்னா’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
” தெலுங்கில் சேகர் கம்முலா, வம்சி, ‘வானம்’ க்ரிஷ் உள்பட பல டாப் இயக்குநர்களின் படங்களுக்கு நடனம் அமைச்சிருக்கேன். என்னோட படங்கள்ல ஒரு பாடலுக்கு டான்ஸ் அமைக்கும் போது, அந்த பாடலுக்கான சிச்சுவேஷனையும் இயக்குநர்கள் என்கிட்ட சொல்வாங்க. அதிலும் மான்டேஜ் ஸாங் சிச்சுவேஷனும் எங்கிட்டதான் வரும். ‘இந்த பாட்டுல நீங்க அவங்கள அழ வைக்குறீங்க. இப்படி ஃபீல் பண்ண வைக்கணும். அப்படி ஃபீல் இருக்கணும்னு எமோஷனலாகவும் சொல்லும்போது அதை எல்லாம் இயக்கியிருக்கேன். அந்த அனுபவங்கள்தான் எனக்குள்ள ஒரு இயக்குநர் இருக்கறதை வெளிக்கொண்டு வந்துச்சு. டான்ஸ் தொடர்பான படம் இல்ல. இது இளைஞர்களுக்கான படமா வந்திருக்கு. லவ் டிராமா. படத்துல நாலு ஹீரோக்கள். எல்லாருமே புதுமுகங்கள். ‘பூவே உனக்காக’ சீரியல்ல பூவரசியா நடித்த ராதிகா ப்ரீத்தி உள்பட பலரும் நடிச்சிருக்காங்க. ஒரிசாவில் பெரிய ஹீரோவா இருக்கற ஒருத்தரும் இதுல நடிச்சிருக்கார்.” நிறைவாக பேசுகிறார் ஸ்வர்ணா.

சிவாஜி, பாரதிராஜா கூட்டணியில் உருவான ‘பசும்பொன்’ல நீங்க டான்ஸ் மாஸ்டர் ஆனது எப்படி?
”அப்ப நான் டி.கே.எஸ். மாஸ்டர்கிட்ட உதவியாளரா இருந்தேன். நான் குரூப் டான்ஸ் ஆடியெல்லாம் மாஸ்டர் ஆகல. டான்ஸ்ல டிப்ளமோ படிச்சிட்டு தான் இந்த துறைக்கே வந்தேன். அவர்தான் ‘பசும்பொன்’ பண்ணியிருக்க வேண்டியது. ஒரு பாடல் க்ளாஸ் ஒர்க்கிற்காக டி.கே.எஸ். மாஸ்டர் வந்திருக்க வேண்டியது. ஆனா, அவர் வராமல் போனதால் நான் ஒர்க் பண்ணினேன். என் ஒர்க்கை பார்த்துதான் ‘பசும்பொன்’ல மாஸ்டர் ஆக்கினாங்க. அப்புறம் ‘தமிழ்ச்செல்வன்’ பண்ணினேன். சத்யராஜின் ‘வில்லாதி வில்லன்’ல ‘மடிசார்’ பாடல்.. சிலுக்கு ஆடும் ‘சிலுக்கு சிலுக்கு..’ பாடல்களுக்கு நடனம் அமைச்சிருக்கேன். அந்த வெற்றிகளோட நான் தெலுங்கு போனேன். அப்படியே ஒடிசா வரை ஒரு ரவுண்ட் அடிச்சிட்டேன்.”

தெலுங்கு ஹீரோக்கள் பிரபாஸ், கார்த்திகேயா கும்மகொண்டா, சிவ பாலாஜி பலரின் முதல் படங்களுக்கு நீங்கதான் மாஸ்டர்..
”ஆமா.. ஹீரோக்கள் மட்டுமில்ல ஹீரோயின்களும் அவங்களோட டான்ஸை எங்கிட்டதான் மோல்டு பண்ணினாங்க. ஏன்னா, அப்ப நான் டான்ஸ் இன்ஸ்டிடியூட் ஒண்ணு நடத்தினேன். அதுல தான் டான்ஸ் கத்துக்கிட்டாங்க. பிரபாஸின் முதல் படம் ‘ஈஸ்வர்’ அப்ப, அவர் ஹீரோயினை கட்டிப்பிடிக்கவே வெட்கப்படுவார். ராஜமௌலி சாரோட ரெண்டு படங்கள் ஒர்க் பண்ண வேண்டியது. என்னால ஒர்க் பண்ன முடியாம போச்சு. அவரோட ‘மரியாதை ராமண்ணா’ பண்ணும் போது என்னை கூப்பிடலாம்னு சொல்லியிருக்காங்க. உடனே ராஜமௌலி சார் ‘அந்தம்மா வர மாட்டாங்க.. ஏன் கூப்பிடுறீங்க’னு சொல்லியிருக்கார். அவரோட படத்துல ஒர்க் பண்ணும் போதுதான் ராஜமௌலி சார் என்னைப் பார்த்து ‘நீங்க திமிரா ஆள். அதான் படம் பண்ண வரமாட்டேங்குறீங்க’னு நினைச்சேன்னு சொன்னார். நீங்க பெரிய படம் பண்றீங்க. நீங்க கூப்பிட்டா பெரிய மாஸ்டர்ஸே வந்திடுவாங்க. ஆனா, நான் சின்னப் படங்கள் பண்ணிட்டிருக்கேன். அவங்க என்னை நம்பிதான் பண்றாங்க. அதை எல்லாம் விட்டுட்டு இங்கே வந்தால், அவங்க பாதிக்கப்படுவாங்க’னு சொன்னதும்.. என்னை ராஜமௌலி சார் பாராட்டினார். என் மீது பெரும் மதிப்பும் அவர் வச்சிருக்கார்.”
இன்னும் பல சுவாரஸ்யமான விஷயங்களை வீடியோ பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்..