அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஓபிஎஸ் தரப்பிலும் முறையீடு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி ஒ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முன், ஒ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் நேற்று மோதிக்கொண்டனர். இதைத் தொடர்ந்து, சட்டம் – ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25-ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதுசம்பந்தமாக மனு தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்திருந்த நிலையில், இன்று பிற்பகல் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் இதே பிரச்சினை தொடர்பாக முறையீடு செய்யப்பட்டது.

வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும், தாங்கள்தான் உண்மையான அதிமுக எனவும் ஒ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனு தாக்கல் நடைமுறை முடிந்தால் நாளை விசாரிப்பதாக தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.