மறைந்திருந்து தாக்கும் உயர் இரத்த அழுத்தம்! | முதுமை எனும் பூங்காற்று | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

உலகளவில் இறப்புக்கான முக்கிய மற்றும் முதன்மை காரணம் இந்த உயர் ரத்த அழுத்தம் என்றால் அது மிகையாகாது. உலகளாவிய கணக்கெடுப்பின்படி தற்போது சுமார் 150 கோடி நபர்கள் இந்த இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் 14 சதவீதம் மக்கள் மட்டுமே அதில் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அதில் ஒரு கோடி நபர்கள் ஆண்டுதோறும் இந்த உயர் ரத்த அழுத்தத்தினால் இறக்கிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.

இந்தியாவில் சர்க்கரை வியாதி ஏழு கோடி மக்களை பாதித்துள்ளது. ஆனால் இந்தியாவில் சுமார் 20 கோடி நபர்கள் உயர் இரத்த அழுத்தத்துடன் உள்ளனர். மாரடைப்பு மற்றும் மூளை பாதிப்பு, பக்கவாதம் மூலம் உயிருக்கு பேராபத்தை ஏற்படுத்தும் முதன்மை மற்றும் மிக முக்கியமான காரணி உயர் ரத்த அழுத்தம். ஆகையால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது மூலம் உயிராபத்தை தடுக்க முடியும். மேலும் இந்த உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைப்பதின் மூலம் 40% பக்கவாதம் ஏற்படுவதையும் 20 % மாரடைப்பு ஏற்படுவதையும் 50% இருதய செயலிழப்பதையும் தவிர்க்கலாம். 50%க்கும் மேற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் செயல் இழப்பைத் தவிர்க்கலாம்.

முதுமை

உயர்இரத்த அழுத்தம் ஒரு நோயா அல்லது வயதானால் எல்லோருக்கும் வரக் கூடிய ஒரு தொல்லையா?

உயர்இரத்த அழுத்தம் முதுமையின் விளைவினால் ஏற்படுகிறது என்றால் வயதான எல்லோருக்கும் உயர்இரத்த அழுத்தம் வரவேண்டுமே! ஆனால் அப்படி இல்லை. இதைப் பற்றி ஒரு ஆராய்ச்சி ஒன்று நடைபெற்றது. ஆப்பிரிக்காவிலுள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் மக்களைப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து உயர்இரத்த அழுத்தம் பரிசோதனை செய்து கொண்டு வந்தார்கள். அக்கிராமத்தில் அவர்கள் முதுமையடையும் காலம் வரை உயர்இரத்த அழுத்தம் யாருக்கும் வரவில்லை. ஆனால், அக்கிராமத்திலுள்ள ஒரு சிலர், மேலை நாட்டிற்குக் குடியேறி அங்கு பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குத் தொடர்ந்து உயர்இரத்த அழுத்தம் பரிசோதனை செய்யும் பொழுது அவர்களில் பெரும்பாலானோருக்கு உயர்இரத்த அழுத்தம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால் உயர்இரத்த அழுத்தம் வருவதற்கு அவர்களுடைய பழக்க வழக்கங்கள், இருக்கும் இடம், சுற்றுப்புறச் சூழ்நிலை மற்றும் உணவு முறை ஆகியவையே முக்கியக் கராணங்களாகும். இதன் மூலம் இரத்த அழுத்தம் வருவதற்கு முதுமை ஒரு காரணமல்ல என்பது தெரிகிறது.

காரணங்கள்

முதுமையில் இதயம் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் மாற்றங்களினாலும், இரத்தக் குழாய்களில் விரிந்து சுருங்குவதில் உண்டாகும் மாற்றங்களினாலும் உயர் இரத்த அழுத்தம் வருகிறது. சுமார் 90% முதியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் வருவதற்கான காரணம் தெரியாது (Essential hypertension).

உயர் இரத்த அழுத்தம் வர வேறு காரணங்கள் (Secondary Hypertension)

இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு சிறுநீரகம் செயல் இழத்தல் புகைப்பிடித்தல் மது அருந்துதல் தைய்ராய்டு தொல்லைகள் மாத்திரைகள், உதாரணம்: வலி நிவாரணி, ஸ்டீராய்டு, ஈஸ்ட்ரோஜன் மற்றும் மன அழுத்தததிற்கு கொடுக்கும் மாத்திரை.

முதுமை

அறிகுறிகள்

உயர்இரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகள் மயக்கம், நடந்தால் மூச்சு வாங்குவது, நெஞ்சுவலி, கால் வீக்கம் போன்றவை. ஆனால் பலருக்கு முதுமையில் மேற்கண்ட தொல்லைகள் ஏதுமின்றி மறைந்திருக்கும். வேறு ஏதாவது நோய்களுக்கு உடற்பரிசோதனை செய்யும் பொழு உயர்ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்படும். ஆகையால் காலமுறைப்படி டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் மறைந்திருக்கும் நோயை எளிதில் கண்டறிய முடியும்.

இரத்த அழுத்தத்தின் மேல் அளவை Systolic அழுத்தம் என்றும், கீழ் அளவை Diastolic அழுத்தம் என்று கூறுவோம். முதுமையில் ஒருவருக்கு 140/90 அளவுக்கு மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்து கொள்ளலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் 130/80க்குள் இருக்க வேண்டும்.

முதுமையில்ஒருமுறைபரிசோதனைசெய்தஉடனேயேஒருவருக்குஉயர்ரத்தஅழுத்தம்இருப்பதாகமுடிவுசெய்துவிடக்கூடாது. ஏனெனில், முதுமையில் முக்கியமாக மேல்அளவு அடிக்கடி ஏற்ற இறக்கத்துடன் இருக்க வாய்ப்புஉண்டு.

முதியவருக்குக் குறைந்தது மூன்று முறையாவது பரிசோதனை செய்தபின்னரே அவருக்கு உயர்ரத்த அழுத்தம் பற்றி முடிவு செய்ய வேண்டும். மனதில் ஏற்படும் பயம், குளிர்காலம், காய்ச்சல், உடல்வலி மற்றும் நெடுநேரம் சிறுநீர்கழியாது இருத்தல் போன்ற காரணங்களால் கூட ரத்தஅழுத்தம் மாறி வரவாய்ப்பு உள்ளது.

எந்த வயதானாலும் உயர்இரத்த அழுத்தத்தின் மேல்அளவு 120 140, கீழ்அளவு 80 – 90 அளவில்தான்இருக்கவேண்டும்.

Representational Image

மேல் அளவு மட்டிலும் அதிகமாக இருக்கும் இரத்த அழுத்தம் (Isolated Systolic Hypertension)

சில முதியவர்களுக்கு மேல் அளவு மட்டும் அதிகமாக இருக்கும் 160 -180. ஆனால் கீழ் அளவு 80 90 அளவிலேயே இருக்கும். இதை மேல் அளவு உயர்இரத்த அழுத்தம் என்று கூறுவார்கள் (Isolated Systolic Hypertension). இது ஓரளவிற்கு முதுமையின் விளைவாக இருக்கும். இவர்களுக்கு பக்கவாதம், மாரடைப்பு, இதயம் வலிமை இழத்தல், சிறுநீரகம் பாதி 4. நோய் மற்றும் இறப்பு விகிதமும் அதிகரிக்கும்.

இந்த மேல் அளவு இரத்த அழுத்தத்தை குறைத்தால் பக்கவாதம் வரும் வாய்ப்பு 30% குறையும், 28% மாரடைப்பு வருவது குறையும்.

பல முதியவர்களுக்கு மேல் அளவு இரத்த அழுத்தம் அதிகரிப்பால் எந்த தொல்லையும் இல்லாமலே இருக்கும். வேறு ஏதாவது காரணத்திற்காக இரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கும் பொழுது இது கண்டுபிடிக்கப்படும். தலைச்சுற்றல், மயக்கம், மூச்சு இரைத்தல், மூக்கில் இரத்தம் சொட்டல், களைப்பு, படபடப்பு, கால்களில் வீக்கம் போன்ற தொல்லைகள் இந்நோயின் முதல் அறிகுறிகளாக இருக்கலாம்.

சுமார் இரண்டு அல்லது மூன்று முறையாக இரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்த பின்பு தான் இந்நோயை உறுதிப்படுத்த வேண்டும். இது முதுமையின் விளைவு தான் என்று எண்ணி அலச்சியம் படுத்தாமல் உடனே சிகிச்சை அளிக்க வேண்டும். பொதுவாக உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதற்கான மாத்திரையே இந்த தொல்லைக்கும் நல்ல பயன் கிடைக்கும்.

தொல்லைகள்

எந்த விதத்தொல்லையும் இன்றி மறைந்திருக்கும் உயர்இரத்த அழுத்தம் தீடீரென்று பலவித தொல்லைகள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தை விளைவிக்கக் கூடிய கொடிய நோய் இது. இதயத்தைப் பாதிக்கும் பொழுது மாரடைப்பு வரலாம், மூளைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் பொழுது பக்கவாதம், மறதி நோய் வரலாம். மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டால் மயக்கம் மற்றும் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. உயர்இரத்த அழுத்தம் தொடர்ந்து அதிக அளவில் இருப்பவர்க்கு சிறுநீரகம் மற்றும் கண் பார்வை பாதிப்பு ஏற்படும். கால்களில் இரத்த ஓட்டம் தடைபட்டு, கால்களல் நடக்கும் பொழு கடுமையான வலி ஏற்படலாம்.

பரிசோதனைகள்

ஈ.ஸி.ஜி. (E.C.G.), மார்பு படம் (X-ray), இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, சர்க்கரை அளவு மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய இரத்தம் மற்றும் சிறுநீரகப் பரிசோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும்.

உயர்இரத்த அழுத்தத்தை குறைக்க எளிய வழிமுறைகள்:

  • உடல் பருமனைக் குறைத்து எடையை சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.

  • தவறாமல் செய்யும் உடற்பயிற்சி (நடைபயிற்சி) உயர்இரத்த அழுத்தத்தையைக் குறைக்கும்.

  • புகை பிடிப்பதை நிறுத்தினால் மருந்தின்றியே உயர்இரத்த அழுத்தம் குறையும்.

  • மதுவும் உயர் இரத்த அழுத்ததின் எதிரி. நிறுத்தவும் அல்லது குறைக்க முயற்சி செய்யவும்.

  • உப்பின் அளவை பெருமளவு குறைக்க வேண்டும். உதாரணம்: ஊறுகாய், அப்பளம், வடகம், வடை, உப்பு பிஸ்கட், டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் மற்றும் கருவாடு.

  • தினசரி தியானத்தின் மூலமும் உயர்இரத்த அழுத்தத்தையை குறைக்க முடியும்.

Geriatric house call program

சிகிச்சை

மேற்கண்ட முறைகள் தொடர்ந்து 4 5 வாரங்கள் கடைபிடித்தும் உயர்இரத்த அழுத்தம் குறையவில்லை என்றால் உயர்இரத்த அழுத்த மாத்திரையை எடுத்து கொள்ளலாம். தற்பொழுது உயர்இரத்த அழுத்தத்தை குறைக்க நல்ல மாத்திரைகள் நிறைய உள்ளன. அவை: உயர்இரத்த அழுத்தத்துக்கு மட்டுமின்றி அதோடு சேர்ந்துள்ள நோய்க்கும் சேர்ந்து ஒரே மாத்திரையாக கொடுப்பார்கள். உதாரணம்: உயர்இரத்த அழுத்தம் மட்டுமே இருந்தால் அதற்கு ஒரு மாத்திரை. உயர்இரத்த அழுத்தத்யோடு இதய நோயும் இருந்தால் அதற்கு வேறு மாத்திரை. உயர்இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருந்தால் அதற்கு தனியாக ஒரு மாத்திரை. இப்படி உயர்இரத்த அழுத்தத்தக்கு மட்டும் மருந்து கொடுக்காமல் கூட இருக்கும் நோய்களுக்கு தக்கவாறு உயர்இரத்த அழுத்தம் மாத்திரையை தேர்ந்தெடுத்து சிகிச்சையளிப்பதே மிக்க சிறந்த முறையாகும். இதன் மூலம் ஒருவர் எடுத்து கொள்ளும் மாத்திரையின் எண்ணிக்கை குறைகிறது, அதன் பக்க விளைவுகளும் குறைகிறது.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க வாழ்நாள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டிருக்குமா?

ஒருவரின் வாழ்நாளினை நிர்ணிக்க கடவுளை தவிர வேறு யாராளும் முடியாது! அப்படி இருக்க டாக்டரால் மட்டும் எப்படி அதை நிர்ணிக்க முடியும்? ஆனால் ஒன்று மட்டும் உறுதி, மாத்திரை குறைத்தோ, கூட்டியோ மருந்தை தொடர்ந்து சாப்பிட வேண்டி இருக்கும். டாக்டரின் ஆலோசனையின்றி மருந்தை நிறுத்தவோ, அளவை கூட்டவோ, குறைக்கவோ கூடாது.

நினைவில் கொள்ளுங்கள்:

வயதான காலத்தில் உயர்இரத்த அழுத்தம் எந்தவித தொல்லையும் இன்றி மறைந்திருக்கும். தொல்லைகள் வரும் வரை காத்திருக்க வேண்டாம். கால முறைப்படி (வருடத்திற்கு ஒரு முறையாவது) குடும்ப டாக்டரை அணுகி உயர்இரத்த அழுத்தத்தை பார்த்துக் கொள்வது மிக நல்லது. ஆகவே உயர்இரத்த அழுத்தத்தை எளிதாக கண்டு அறிந்து சுலபமாக சிகிச்சை பெற்று முதுமையில் நலமாக வாழலாம். இதற்கு வேண்டியது சிறிய முயற்சியே. ஆனால் கிடைக்கும் பலனோ மிகப் பெரியது. இன்றே முயற்சி செய்யுங்கள் !

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.