உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய ஜோடி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

சாங்வான்,

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10 மீட்டர் ஏர்ரைபிள் கலப்பு அணிகள் பிரிவின் தகுதி சுற்றில் இந்தியாவின் மெகுலி கோஷ்-சாகு துஷார் மானே இணை 634.4 புள்ளிகள் குவித்து முதலிடத்தை தனதாக்கி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஹங்கேரியின் முன்னணி ஜோடியான இஸ்வான் பெனி-எஸ்தர் மெஸ்ஜாரோஸ் 630.3 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்தது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய ஜோடி, ஹங்கேரி இணையுடன் மோதுகிறது. இறுதிசுற்றை எட்டியதன் மூலம் மெகுலி கோஷ்-சாகு துஷார் மானே ஜோடி தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றுவதை உறுதி செய்துள்ளது.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் தகுதி சுற்றில் இந்தியாவின் ஷிவா-பலாக் ஜோடி 574 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் கஜகஸ்தான் இணையுடன் மோதுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.