“எங்களுடன் எட்டப்பர்களாக இருந்தவர்களின் முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது” – இபிஎஸ்

விழுப்புரம்: “தொண்டர்கள், உழைத்து உருவாக்கிய கட்சி அதிமுக. இது உழைப்பால் உயர்ந்த கட்சி, ஆட்சிக்கு வந்த கட்சி. எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், எங்களோடு இருந்த எட்டப்பர்களை வைத்து எங்களை வீழ்த்த நினைக்கிறீர்கள், ஒருபோதும் நடக்காது” என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இன்று நடந்த அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது: “இன்று அதிமுக பல்வேறு சோதனைகளை தாண்டித்தான் வென்றிருக்கிறது. கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் இந்த கட்சியை தொடங்கியபோது, பல்வேறு இன்னல்களுக்கும், துன்பத்திற்கும் ஆளானார். அதன்பின்னர் வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பின்னர், ஜெயலலிதாவும், பல்வேறு இன்னல்கள், துயரம், துன்பங்களுக்கு ஆளாகி போராடி வெற்றி பெற்றார்.

அந்த இருபெரும் தலைவர்கள் எப்படி போராடி வெற்றி பெற்றார்களோ, அதுபோலத்தான் இப்போதும் நிகழ்கிறது, வெற்றி உறுதி நிச்சயம்.

அந்த இருபெரும் தலைவர்கள் எப்படி போராடி எப்படி அதிமுக அரசாங்கத்தை உருவாக்கித் தந்தார்களோ, அதேபோல, இங்குள்ள உண்மை விசுவாசிகள் உழைப்போடு நிச்சயமாக அதிமுக ஆட்சி அமையும். நம்மிடத்திலே சில பேர் எட்டப்பர்களாக இருந்துள்ளனர், இன்றைக்கு அவர்களுடைய முகத்திரை கிழிக்கப்பட்டிருக்கிறது. நம்முடன் இருந்துகொண்டே,நம்முடைய கட்சியை வலுவிழக்கச் செய்தார்கள், பலவீனமடைய செய்தார்கள்.

அதிமுக 2021-ல் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால், இப்போதுதான் தெரிகிறது, நம்முடன் இருந்துகொண்டு சூழ்ச்சி செய்து வெற்றியை தடுத்தவர்கள், இன்று இந்த கட்சியை பிளக்கப் பார்க்கிறார்கள். எந்த கொம்பனாலும், அதிமுகவை பிளக்க முடியாது. இது உயிரோட்டமுள்ள கட்சி. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் தெய்வமாக இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.

தொண்டர்கள், உழைத்து உருவாக்கிய கட்சி அதிமுக. இது உழைப்பால் உயர்ந்த கட்சி, ஆட்சிக்கு வந்த கட்சி. எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின், எங்களோடு இருந்த எட்டப்பர்களை வைத்து எங்களை வீழ்த்த நினைக்கிறீர்கள், ஒருபோதும் நடக்காது” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.