“படிக்கச் சொல்லி டார்ச்சர் பண்றாங்க!” – பள்ளி மாணவி மர்ம மரணம்; இரண்டு ஆசிரியர்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை விடுதியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து அந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தது பள்ளி நிர்வாகம். தகவலறிந்து அங்கு வந்த மாணவியின் பெற்றோர்களும், உறவினர்களும் அவர் சடலத்தைப் பார்த்து கதறியழுதனர். “ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு வர்றேம்மான்னு சொல்லிட்டு இப்படி பொணமா கெடக்கிறியே. என் பொண்ணு தற்கொலை பண்ணிக்க மாட்டா. அவ சாவுக்கு ஏதோ காரணம் இருக்கு” என்று மாணவியின் தாய் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க வைத்தது.

மாணவி படித்த தனியார் பள்ளி

அதே போல அங்கு விரைந்துவந்த சின்னசேலம் காவல் துறையினர், மாணவியின் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 10 ஆண்டுகளில் இதேபோல பல மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக குற்றம்சுமத்திய மாணவியின் உறவினர்கள், அவர் தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தின்மீதும், ஆசிரியர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடத்தி பள்ளிக்கு சீல் வைக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி சென்னை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதையடுத்து அங்கு குவிந்த போலீஸார்கள் அவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி போராட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். அப்போது, ”என் பிள்ளை சாவுக்கு ஸ்கூல்தான் பொறுப்பு. என் பிள்ளைய அடிச்சிதான் கொன்னுருக்காங்க. என் பிள்ளை எதாவது தப்பு பண்ணியிருந்தால் எங்ககிட்டதான் சொல்லணும். இவங்கதான் ஏதோ பண்ணிட்டாங்க. வேணும்னே மண்டையில் அடிச்சிருக்காங்க. விழுந்தவுடனே பிள்ளை எப்படி சாகும்? என்னை வேற ஸ்கூலில் சேர்த்து விடுங்கன்னு என் பிள்ளை சொன்னதும், போன வாரமே வந்து டி.சியை கேட்டோம். ஆனால் ஸ்கூலில் டி.சி கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அப்போ டி.சி-யை கொடுத்திருந்தா இன்னைக்கு என் பிள்ளை உயிரோட இருந்திருக்கும்” என்று செய்தியாளர்களிடம் கதறினார் உயிரிழந்த மாணவியின் தாய்.

இதற்கிடையில் மாணவி எழுதியதாகக் கூறப்படும் தற்கொலை கடிதத்தை கைப்பற்றிய எஸ்.பி செல்வகுமார், அதனை மாணவியின் உறவினர்கள் முன்பு படித்துக் காட்டினார். அந்த கடிதத்தில், “கணித ஆசிரியரும், வேதியியல் ஆசிரியரும் படி படி’ன்னு சொல்லி என்னை டார்ச்சர் செய்றாங்க. என்னை மட்டுமில்லைங்க. இருக்குற எல்லா ஸ்டூடண்ட்ஸையும் டார்ச்சர் பண்றாங்க. சாந்தி மேடத்திற்கு நான் கோரிக்கை வைக்கிறேன். எனக்கு இந்த வருஷத்து கட்டின ஸ்கூல் ஃபீஸ் மட்டும் என் அம்மாகிட்ட திருப்பி கொடுத்துடுங்க. அதேபோல புக் ஃபீஸ், ஹாஸ்டல் ஃபீஸையும் கொடுத்துடுங்க…” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த கடிதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் மாணவியை ஆசிரியர்கள் திட்டியது உறுதி செய்யப்பட்டது. அதனடிப்படையில் கணித ஆசிரியர் வசந்த், வேதியியல் ஆசிரியை ஹரிப்ரியா இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி செல்வகுமாரிடம் பேசியபோது, “படிக்கச் சொல்லி ஆசிரியர்கள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே தற்கொலை செய்துகொள்வதாக மாணவி கடிதம் எழுதியிருக்கிறார். அதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் இரண்டு ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். தற்போது அவர்களை ரிமாண்ட் செய்வதற்கான பணிகளை மேற்கொண்டிருக்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.