#DearNothing என்று நத்திங் நிறுவனத்தை ட்விட்டரில் துவம்சம் செய்யும் தென் இந்தியர்கள் – காரணம் என்ன?

Dear Nothing Issue: உலகளவில் அதிகம் பேசப்பட்ட நத்திங் போன் (1) இறுதியாக இந்தியா உள்பட உலக நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் அதன் சக்திவாய்ந்த அம்சங்கள், ஸ்டைலான தோற்றம் காரணமாக பெரும் பேசுபொருளாக உலாவந்தது.

போனில் பல அம்சங்கள் குறிப்பிடும்படி கொடுக்கப்பட்டிருந்தன. இரண்டு 50 மெகாபிக்சல் கேமரா, அமோலெட் டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், விழிப்பூட்டல்களுக்கான பிரத்யேக விளக்குகள் என சிறப்பம்சங்கள் இதில் அடங்கியுள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு 9 மணிக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனை இந்தியாவில் உள்ள பல யூடியூபர்கள் தங்கள் சேனல்களில் அறிமுகம் செய்தனர். ஆனால், தென்னிந்தியாவில் இருக்கும் எந்த யூடியூபர்களுக்கும் மதிப்பாய்வு செய்ய போன் அனுப்பி வைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதாவது, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களிலும் உள்ள டெக் யூடியூபர்களுக்கும் நத்திங் போன் (1) அனுப்பப்படவில்லை. ஆனால், நிறுவனத்தில் செயல்பாடு சற்றி எல்லை மீறி சென்றுவிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது.

முன்னாள் ஒன்பிளஸ் நிறுவனர்களில் ஒருவரான கார்ல் பெய், நத்திங் நிறுவனத்தை, லண்டனில் தொடங்கினார். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நத்திங் நிறுவனம், தங்களின் முதல் ஸ்மார்ட்போன் குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது.

அதனைத் தொடர்ந்து போன் (1) மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்தது. தொடர்ந்து நத்திங் போன் 1-ஐ அறிமுகம் செய்த நிறுவனம், அனைத்து நாடுகளில் போனின் விலையை குறைவாக பட்டியலிட, உள்நாடுகளிலேயே தயாரிக்க திட்டமிட்டது.

நிறுவனம் திட்டமிட்டபடி, இந்தியாவில் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் இருக்கும் Foxconn ஆலையில் போன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து போனும் அறிமுகம் செய்யப்பட்டது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதால், ஸ்மார்ட்போன் தகுந்த விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் யூடியூபர்கள் போனை மதிப்பாய்வு செய்ய பதிவு செய்துள்ளனர். ஆனால், நாட்டில் உள்ள மூலை முடுக்குகளில் எல்லாம் போனை அனுப்பிய நிறுவனம், தென்னிந்தியாவிற்கு மட்டும் போனை அனுப்ப மறுத்துள்ளது.

பதிவுசெய்திருந்த தென்னிந்திய யூடியூபர்களுக்கு, “இது உங்களுக்கான ஸ்மார்ட்போன் இல்லை” என்று கிண்டலாக ஒரு செய்தியை நிறுவனம் அனுப்பியுள்ளது.

இதில், டெக் ரிவீவர்கள் பெரும் எரிச்சலடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தயார் செய்யப்பட்ட போன், தமிழ்நாட்டு யூடியூபர்களுக்கே கிடையாது என்றால், நிறுவனம் யாருக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்று குமுறுகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே தற்போது, #DearNothing #BoycottNothing ஹேஷ்டேகுகளைத் தொடங்கி தென்னிந்தியர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் இந்தியளவில் முதலிடத்தைப் பிடித்து டிரெண்டிங்காகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிரசாத் என்ற யூடியூப் சேனல் வீடியோ ஒன்றை வெளியிட்டது. இந்த யூடியூபர் நத்திங் நிறுவனம் பாகுபாடு காட்டுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பிற டெக் யூடியூபர்களுக்கு மட்டும் மொபைல் மதிப்பாய்வுக்காக அனுப்பப்பட்ட நிலையில், தென்னிந்தியாவில் உள்ளவர்களுக்கு மட்டும் ஏன் அனுப்பப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போது தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலான யூடியூபர்கள் இது தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.