‘அக்னிபாதை’ திட்டத்துக்கு எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டு காலத்துக்கு பணி யாற்றும் ‘அக்னிபாதை’ என்ற திட்டத்தை கொண்டுவர மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 14-ம்தேதி ஒப்புதல் அளித்தது. அதன்படி 17 வயது முதல் 21 வயதுள்ள இளைஞர்கள் முப்படைகளிலும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முதல் கட்டமாக விமானப் படையில் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

வழக்கறிஞர் ஹர்ஸ் அஜய் சிங் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘அக்னிபாதை திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இத்திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன.இதில் அக்னி வீரர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. அதனால் அக்னிபாதை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’’என கூறியுள்ளார்.

வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘அக்னிபாதை திட்டம் சட்டவிரோதமானது, அரசியலமைப்புக்கு எதிரானது’’ என கூறியுள்ளார்.

இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என மத்திய அரசு சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை விசாரிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.