அந்தமான் மீனவர்களுக்கு விரைவில் குடியிருப்பு, ஆழ்கடல் மீன்பிடிப்பு வசதிகள்: எல்.முருகன் தகவல்

போர்ட் பிளேர்: அந்தமான் தீவு மீனவர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பு, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான வசதிகளை விரைவில் மத்திய அரசு செய்து கொடுக்கும் என்று தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் எல்.முருகன் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்தமான் தீவுகளுக்குச் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர் பயணத்தின் முதல் நாளான வியாழக்கிழமை ( ஜூலை 14) ரங்கத் வளைகுடா பகுதியிலுள்ள மீனவர்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்குள்ள மீனவர்கள் மத்திய அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களால் பயனடைந்தது குறித்து எடுத்துரைத்ததுடன் பல்வேறு கோரிக்கைகளையும் வைத்தனர்.

தொடர்ந்து பேசிய மீனவர்கள், தற்போது அவர்கள் ஃபைபர் படகில் 5 கடல் மைல் தொலைவு வரை மட்டுமே சென்று மீன் பிடித்து வருவதாகவும், ஆழ்கடல் மீன்பிடிப்புக்குத் தேவையான வலை மற்றும் ட்ராவலர் எனப்படும் அதிநவீன படகு தங்களுக்குத் தேவைப்படுகிறது. அந்த வசதிகளை மத்திய அரசு செய்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மீனவர்களில் சிலர் தங்களுக்கு பாதுகாப்பான நிரந்தரக் குடியிருப்பு வேண்டும் எனவும், “மாடர்ன் ஃபிஷர்மென் வில்லேஜ்” திட்டத்தின் கீழ் இத்தகைய குடியிருப்புகளை கட்டித்தர அரசு ஏற்கெனவே ரூ.1.75 லட்சம் நிதி ஒதுக்கியதோடு, அதற்கான நிலத்தையும் தேர்வு செய்துள்ள போதிலும், கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மீனவ மக்கள் முறையிட்டனர்.

மீனவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த அமைச்சர் எல்.முருகன் அவர்களிடம் கூறியதாவது: “உங்களின் இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் பிரதமர்மோடி மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்துக்கு எடுத்துச் சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நவீன மீனவர் கிராமத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பான குடியிருப்பு, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கான ட்ராவலர் படகு உள்ளிட்ட வசதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஃபைபர் படகு மூலம் குறுகிய தூரம் வரை மட்டும் சென்று மீன்பிடிப்பதால் பெரிய அளவில் பொருளாதார பலன் உங்களுக்கு ஏற்படாது. நீண்ட தூரம் சென்றால் மட்டுமே அதிகமான, அரியவகை மீன்கள் கிடைக்கும். ஆனால், அருகில் உள்ள பிற நாட்டு மீனவர்கள் இந்த மீன்களையெல்லாம் பிடித்துச் செல்கின்றனர். இதனால் நமக்கு எவ்வளவு பொருளாதார இழப்பு ஏற்படும் என்பதையெல்லாம் நான் அறிவேன்.

எனவே, இந்த கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் தான் மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. உங்கள் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும்” என்று அமைச்சர் முருகன் கூறினார்.

தொடந்து கதம்தலாவுக்குச் சென்ற அமைச்சர், பின்னர், கதம்தலா மற்றும் பாராடாங் தீவை இணைக்கும் ஆஸாத் ஹிந்த் பாலத்தை பார்வையிட்டார்.

முன்னதாக, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அந்தமான் வந்த மத்திய இணையமைச்சர் எல். முருகனை அந்தமான் பொது நிர்வாகத்துறைச் செயலர் வினய் பூஷன், துணைக் கோட்ட மாஜிஸ்ட்ரேட் தில்குஷ் மீனா, உதவி கோட்ட மாஜிஸ்திரேட் ஹரி கள்ளிக்கட், போர்ட் பிளேர் நகராட்சித் தலைவர் கவிதா உதயகுமார், தெற்கு அந்தமான் நிர்வாக மாவட்டத் தலைவர் பிரமீளா குமாரி, மீனவளத் துறை இயக்குநர் நிதி அகர்வால், தூர்தஷன் மற்றும் அகில இந்திய வானொலியின் அதிகாரிகள் வரவேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.