கர்ப்பிணியை காப்பாற்ற முயன்றவர்களுக்கு நேர்ந்த துயரம் -வெள்ளத்தில் சிக்கிய இருவர் பலி

வெள்ளம் சூழ்ந்த பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண்ணை பாதுகாப்பாக வெளியே மீட்டு வர முயன்ற இரு இளைஞர்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்து வருகிறது. தலைநகர் ஹைதராபாத் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் விட்டு விட்டு பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் தவிக்கும் மக்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அவை வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் பல நீர்த்தேக்கங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளம் அபாய அளவை தாண்டி செல்கிறது. கரையோர பகுதிகள் அனைத்தும் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

image
இந்த நிலையில் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள குமுரம் பீம் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர், வெள்ளம் சூழ்ந்த தனது வீட்டில் சிக்கித் தவித்து வந்துள்ளார். அவரை மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதிருந்ததால் அவருக்கு உதவும் பொருட்டு நிலக்கரி சுரங்க நிறுவனத்தை சேர்ந்த 6 பேர் வந்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்த அந்த பகுதியில் இருந்து கர்ப்பிணி பெண்ணை பாதுகாப்பாக வெளியே மீட்டு வர முயன்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த 28 மற்றும் 32 வயதுடைய இருவர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.
image
இதையடுத்து காணாமல்போன இருவரையும் தேடும் பணியில் தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் இறங்கினர். இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) காலையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இருவரும் ஒரு ஓடையிலிருந்து பிணமாக மீட்கப்பட்டனர். கர்ப்பிணிப் பெண்ணை மீட்கச் சென்றவர்கள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிக்கலாம்: ”வலிக்குதுங்க.. இப்படி பன்னாதீங்க” – ஹார்ன் அடிப்போருக்கு ஆட்டோக்காரரின் நச் பதில்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.